அண்ணாமலையை ‘ரவுண்ட் அப்’ செய்யும் திமுக.. நானும் வழக்கு தொடர்வேன்.. கனிமொழி பரபர பேட்டி!
மதுரை : திமுகவினரின் சொத்துப் பட்டியல் என அண்ணாமலை வெளியிட்ட லிஸ்ட் தொடர்பாக அண்ணாமலைக்கு ஏற்கனவே திமுக சார்பிலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பிலும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், நானும் வழக்கு தொடர்வேன், அதற்கு அண்ணாமலை பதிலளிக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக தலைவர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார்.

அப்போது, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ரூ.200 கோடி லஞ்சம் பெற்றதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். உடனடியாக பிரஸ் மீட்டைக் கூட்டிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவதூறாக குற்றம்சாட்டிய அண்ணாமலை மீது வழக்கு தொடுக்கப்படும் என எச்சரித்தார்.
இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸில், "திமுக மீது ஆதாரமற்ற வகையில் குற்றம்சுமத்தி சொத்து பட்டியல் வெளியிட்டது தொடர்பாக அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், ரூ.500 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறான, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில், உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகவும், 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையென்றால் ரூ.50 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி, தானும் அண்ணாமலைக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாகத் தெரிவித்துள்ளார். அண்ணாமலை வெளியிட்ட DMK Files சொத்து பட்டியலில் கனிமொழி எம்.பிக்கு ரூ.830 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி கனிமொழி, சொத்துப் பட்டியல் தொடர்பாக அண்ணாமலைக்கு ஏற்கனவே திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், நானும் வழக்கு தொடர்வேன், அதற்கு அண்ணாமலை பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications