மதுரையில் குஷ்பு கைது.. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பேரணிக்கு முயன்றபோது நடவடிக்கை
மதுரை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. மதுரையில் அனுமதியை மீறி போராட்டம், பேரணி செல்ல முயன்றதாக குஷ்பு உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை உறுதி செய்யவும் பாஜக மகளிர் அணி சார்பில் பேரணி அறிவிக்கப்பட்டது. மதுரையில் இந்த பேரணியை, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தொடங்கி வைப்பார் என்றும், பேரணி திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம் வழியாக சென்னை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. பேரணியில் இறுதியில், பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்து மனு அளிக்க இருந்தனர்.

இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. அனுமதி மறுப்புக்கு கண்டனம் தெரிவித்திருந்த பாஜகவினர், இன்று காலை திட்டமிட்டபடி மதுரை சிம்மக்கலில் உள்ள செல்லாத்தமன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கண்ணகி சிலை முன்பு திரண்டனர். அங்கு தீச்சட்டி ஏந்தி சாமியாடிய பாஜகவினர் பின்னர் பேரணியை தொடங்க முயன்றனர். ஆனால், பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைதாகியுள்ளனர்.
முன்னதாக பேரணியை தொடக்கி வைத்து பேசிய குஷ்பு, "திமுக அரசுக்கு எதிராக, மாநிலத்தில் நடக்கும் குற்றங்களுக்கு எதிராக நாங்கள் பேரணி நடத்த அனுமதி கேட்டால் அவர்கள் கொடுக்க மாட்டார்கள் என்று எங்களுக்கு தெரியும். எங்களுக்கு மட்டுமல்ல, வேறு யாருக்குமே அவர்கள் அனுமதியை கொடுப்பதில்லை. பாஜக எதை பேசினாலும் அதில் உண்மை இருக்கும். எனவே காவல்துறை அனுமதி மறுக்கிறது. கண்ணகி பிறந்த மண் இது. என்னுடை மண்ணில் எந்த பிரச்சனை இருந்தாலும் அதற்காக நான் வந்து நிற்பேன். நாங்கள் பேசுவதை மக்கள் காது கொடுத்து கேட்க தொடங்கிவிட்டார்கள்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். 6 முறை சாட்டையால் தன்னை அடித்துக்கொண்டு, அறுபடை முருகன் வீடுகளிலும் இந்த சம்பவம் குறித்து முறையிட உள்ளதாக அவர் கூறியிருந்தார். சொன்னதை போலவே சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டம் நடத்தியிருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் விவாத பொருளாக மாறியிருந்தது.
அதேநேரம், மாணவி வன்கொடுமை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பாஜக கோரியிருந்தது. ஆனால் இந்த கோரிக்கை தமிழக அரசு நிராகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications