"என்ன கொடுமை சரவணன் சார்".. நல்லது பண்ணாலும் இப்படியா வினையாகும்.. திருப்பரங்குன்றம் எம்எல்ஏ விரக்தி
திருப்பரங்குன்றம் எம்எல்ஏ டாக்டர் சரவணன் தலைமையிடம் சீட் கேட்டுள்ளாராம்
மதுரை: நல்லதை தேடி தேடி செய்தாலும், இப்படி வினை வந்து சேருகிறதே என்று நொந்து போய் இருக்கிறாராம் திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன்!
திருப்பரங்குன்றம் சரவணன் என்றாலே அரசியல் கட்சியில் ரொம்ப ஃபேமஸ்.. அதிமுக,பாஜக என்றெல்லாம் டாக்டர் சரவணன் பார்க்கவே மாட்டார்.
எதுவானாலும் சரி, தவறு என்றாலோ அல்லது மக்களுக்கு ஒத்துவராத திட்டம் என்றாலோ முதல் எதிர்ப்பு குரல் சரவணனிடம் இருந்துதான் எழும். இதனால் பலம்பொருந்திய எம்எல்ஏவாக சரவணன் திகழ்ந்து வருகிறார்
இதன் காரணமாகவே சரவணனுக்கு பெரும் மதிப்பு தொகுதிக்குள் கூடிவருகிறது.. ஆனால், இது திமுக தரப்பிலேயே உள்ள நிர்வாகிகளுக்கு எரிச்சலை தருவதாக ஏற்கனவே செய்திகள் கசிந்தன.
இதற்கு காரணம், சரவணன் மதிமுகவில் இருந்து வந்தவர் என்பதால் மதுரை திமுக நிர்வாகிகளில் ஒருசிலருக்கு சரவணனை ஏற்று கொள்ள முடியவில்லை.. மேலும், சரவணன் அடிக்கடி பல நிகழ்ச்சிகளை நடத்தி வருவதால், மாவட்ட செயலருக்கு கூட இதை பற்றின தகவலை தெரிவிப்பதில்லை என்கிறார்கள்..
மாற்று கட்சிக்காரர்கள் யாராவது இணைவதாக இருந்தால்கூட, அது சரவணன் முன்னிலையில்தான் இணைகிறார்களாம். இதுதான் புகைச்சலுக்கு காரணம். இந்நிலையில்தான் இன்னொரு தகவலும் கசிந்துள்ளது.. வரும் தேர்தலில், மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு, தலைமைக்கும் தெரியப்படுத்தியிருக்கார் சரவணன்.. ஆனால், அங்குள்ள கட்சி நிர்வாகிகள் இதை விரும்பலையாம்.
இதனால், எம்எல்ஏ., நடத்துற நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு தராததால், மற்ற கட்சியினரும் போகக் கூடாது என்று முட்டுக்கட்டை போட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் உச்சக்கட்ட விரக்தியில் இருக்கிறாராம் சரவணன்.. கட்சி தலைமையிடம் முறையிட போகிறாராம்.. ஆனால் அந்த தொகுதிக்கு, இந்த கொரோனா காலத்தில் டாக்டர் சரவணன் செய்த நலத்திட்டங்களும், உதவிகளும் ஏராளமானவை என்பதை யாராலும் மறுக்கவே முடியாது!