சவுக்கு சங்கர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? நேரில் ஆஜராக ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு
மதுரை: சர்ச்சைக்குரிய நபரான சவுக்கு சங்கர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் நீதித்துறையை உள்நோக்கத்துடன் விமர்சித்ததால் சவுக்கு சங்கர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
யூ டியூபில் மாரிதாஸ் என்ற நபர் பல்வேறு அவதூறுகளை பரப்பி வந்தார். அதனால் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். மாரிதாஸ் தொடர்பான வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து சமூக வலைதளத்தில் சவுக்கு சங்கர் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டார் என்பது புகார்.
இதனையடுத்து சவுக்கு சங்கர் மீது தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளருக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இதனடிப்படையில் சவுக்கு சங்கர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.
நீதிபதி குறித்த சர்ச்சை கருத்துக்கள்.. சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஹைகோர்ட் கிளை
இன்றைய விசாரணையின் போது நீதிபதிகள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அரசு தரப்பு, லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய சவுக்கு சங்கர் 2010-ல் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு கருணைத் தொகையாக மாதம் ரூ40,000 வழங்கப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளில் சுமார் ரூ50 லட்சத்துக்கும் மேல் சவுக்கு சங்கர் கருணை ஊதியம் பெற்றுள்ளார் என கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கருக்கான ஊதியத்தை நிறுத்த வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.