காவல்துறையினர் அலட்சியத்துடன் செயல்படக் கூடாது..விளாத்திகுளம் மாணவி வழக்கில் நீதிபதிகள் சுளீர்
மதுரை: விளாத்திகுளம் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கை ஏப்ரல் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது. 5 பேரிடம் டிஎன்ஏ சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது என அரசுத்தரப்பு கூறிய நிலையில், மாணவி காணவில்லை என்பது முக்கியமான புகார். அதில் காவல்துறையினர் அலட்சியத்துடன் செயல்படக்கூடாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் மாரீஸ்வரி, விளாத்திகுளத்தில் 12 ஆம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,"ஆய்வக பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சந்தேகத்துக்கிடமானவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்கிடமானவர்களிடம் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது"என வாதிட்டார்.
இதனையடுத்து பேசிய நீதிபதிகள்," விசாரணை சரியான முறையில் சென்று வருகிறது. பெற்றோர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். வாக்குமூலத்தை வீடியோ, ஆடியோவாக பதிவு செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அறிவியல் முறையில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். மாணவி காணவில்லை என்பது முக்கியமான புகார். அதில் காவல்துறையினர் அலட்சியத்துடன் செயல்படக்கூடாது. விசாரணை குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்றனர்.












Click it and Unblock the Notifications