டிஎன்பிஎஸ்சியின் அச்சம் நியாயமானது இல்லை.. குரூப் 4 தேர்வர்களை மகிழ வைத்த ஹைகோர்ட் உத்தரவு
மதுரை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தட்டச்சர், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு தேர்வுக்கான இறுதி விடைகளை உரிய நேரத்தில் வெளியிட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது.. இந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை பார்ப்போம்.
தமிழக அரசு பணியில் அதிக வேலைவாய்ப்பை தரும் குரூப் 4 பணியிடங்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நிரப்புவது வழக்கம். அந்த வகையில் குரூப்-4 காலி பணியிடங்களான, கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளர்க் - 3, தனிச் செயலாளர், இளநிலை நிர்வாகி, பால் பதிவாளர், ஆய்வக உதவியாளர், பில் கலெக்டர், தொழிற்சாலை மூத்த உதவியாளர், வனப் பாதுகாவலர், இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது.

விண்ணப்பிக்க ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது. சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், கடந்த ஜூன் 9ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் 15 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுக்காக தேர்வர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.
இதனிடையே 6 ஆயிரத்து 244 குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில், செப்டம்பர் மாதம் கூடுதலாக 480 பணியிடங்கள் அரசால் சேர்க்கப்பட்டது. இதனிடையே அக்டோபர் 9ஆம் தேதி மேலும் கூடுதலாக 2 ஆயிரத்து 208 பணியிடங்களை சேர்த்து அறிவித்துள்ளது.
அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் 400, இளநிலை உதவியாளர் பிணையற்றது 3 ஆயிரத்து 458, இளநிலை உதவியாளர் பிணை உள்ளது 69, பில் கலெக்டர் 99, தட்டச்சர் 2 ஆயிரத்து 360, சுருக்கெழுத்தர் நிலை 3 ல் 642, இளநிலை உதவியாளர் வக்பு வாரியம் 32, சுருக்கெழுத்தர் நிலை 3, தமிழ்நாடு பால் உற்பத்தி கூட்டுறவு இணையம், கூட்டுறவு நிறுவனங்களில் 17, தடயவியல் துறையில் 32, வனத்துறையில் 216, வீட்டுவசதி வாரியம் 22 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் 28 ந் தேதி https://tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டது. இதேபோல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவோரின் பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.
இந்த சூழலில் டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு முடிவுகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்துலட்சுமி, குணசீலன், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மணிமேகலா, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முத்துசெல்வம் ஆகியோர் குரூப் 4 முடிவுகள் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.அவர்கள் தங்கள் மனுவில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தட்டச்சர், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த தேர்வு இறுதி விடையை தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த தனிநீதிபதி, அனைத்து தேர்வுகளுக்கும் பின்பற்றுவதை போல, குரூப்-4 தேர்வு இறுதி விடைகளையும் உரிய நேரத்தில் வெளியிட வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி.க்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் பிறப்பித்த உத்தரவின் விவரம்: அரசு பணி நியமனத்துக்கு முன்னதாக தேர்வு விடையை வெளியிட்டால், தேர்வு எழுதியவர்கள் உடனடியாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துவிடுவார்கள் என டிஎன்பிஎஸ்சி அச்சமடைந்து உள்ளது. இது நியாயமானதல்ல என்பது எங்கள் கருத்து.
இறுதி விடைகளின் அடிப்படையில் சரியான மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள தேர்வு எழுதிய ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. இவ்வாறு விடைகளை உரிய நேரத்தில் தெரிந்து கொள்வதன் மூலம் பல்வேறு தவறுகள் கண்டறியப்படுகின்றன. அதன் அடிப்படையில் பணி நியமனத்துக்கு முன்னதாக விடைகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடாது என்ற அறிவிப்பு இனி ரத்து செய்யப்படுகிறது.
இனிமேல் அரசு பணி நியமனத்துக்கு முன்னதாக, இறுதி விடைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும். ஆனால் இந்த விடைகள் வெளியிடுவது என்பது, ஒரே கட்டமாக நடத்தப்படும் அப்ஜெக்டிவ் வகை தேர்வுகளுக்கு மட்டுமே பொருந்தும். மேற்கண்ட பணியிடங்களுக்கான நபர்கள் தேர்வு நடைமுறைகள் முடிந்துவிட்டதால் இதில் தலையிட முடியாது என டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் கூறியதையும் பதிவு செய்து கொள்கிறோம். இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினார்கள்..












Click it and Unblock the Notifications