தூங்கும் புலியை சீண்டிவிட்டார்கள்! பாகிஸ்தானை விடக் கூடாது! கொதித்த மதுரை ஆதீனம்
மதுரை: தூங்கும் புலியை சீண்டியதால் அதற்கான விளைவை பாகிஸ்தான் அனுபவித்தே ஆக வேண்டும் என மதுரை ஆதீனம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் அவ்வாறு தெரிவித்தார்.
மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும். அந்த நாட்டுடன் எந்த நாடுகளும் தொடர்பு கொள்ள கூடாது. இந்தியாவில் வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இன்று மத தீவிரவாதத்தில் ஈடுபடுவது பாகிஸ்தான். அதை தூண்டி விடுவது சீனா. காஷ்மீர் விவகாரத்தில் தற்போதைய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கிறது. நேரு ஆட்சியின் போது பல்வேறு இடங்களை இழந்துவிட்டோம். மோடி நம்பர் ஒன் பிரதமராக உள்ளார்.
பாரதநாடு சமாதானத்தையே விரும்புகிறது. ஆனால் தூங்கும் புலியை இடறியதால் ஏற்படும் விளைவை பாகிஸ்தான் அனுபவித்தே ஆக வேண்டும். தீவிரவாத தாக்குதலுக்காக சிந்து நதி நீர் நிறுத்தப்பட்ட முடிவு சரியானதுதான். அவர்களுக்கு தண்ணீரே கொடுக்கக் கூடாது.
அவர்களுக்கு மனிதாபிமானம் இல்லாமல் இந்தியர்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர். எனவே தண்ணீர் மட்டுமில்லை, காற்றையும் கூட அவர்களுக்கு தரக் கூடாது. ராகுல் சின்ன பையன் அவருக்கு ஒன்றுமே தெரியாது. இலங்கையில் தமிழர்களை மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு இருந்த போதுதான் ராஜபக்சே அரசு கொலை செய்தது. அப்போது வாஜ்பாய் ஆட்சியில் கொடுத்த பதிலடி போல் இந்த முறையும் பாகிஸ்தானுக்கு பதிலடி தர வேண்டும் என பேசினார்.
கடந்த 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமின் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் ரசித்துக் கொண்டிருந்த போது பயங்கரவாத தாக்குதல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்தியாவைச் சேர்ந்த 25 பேரும் நேபாள நாட்டவர் ஒருவரும் என 26 பேர் பலியாகிவிட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடியாக இந்திய அரசு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துவிட்டது. இதனால் பாகிஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும், விவசாயம் பாதிக்கும், நீர் மின் நிலையங்களுக்கு தண்ணீர் இல்லாமல் மின்சார பற்றாக்குறையும் ஏற்படும். அது போல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications