மதுரை எய்ம்ஸ்.. குட் நியூஸ்.. கட்டுமான பணி எப்போது முடியும்? செயல் இயக்குநர் கூறிய சூப்பர் தகவல்!
மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கும் பணிகள் தாமதமாகி வரும் நிலையில், முதற்கட்ட பணிகள் எப்போது முடிவடையும்? நேரடியாக மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறும்? என்பது பற்றி மதுரை எய்ம்ஸ் செயல் இயக்குநர் ஹனுமந்தராவ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு அறிவித்தது. ஆனால், இடம் தேர்வு செய்தது முதல் நிதி ஒதுக்குவது வரை நீண்ட கால தாமதம் காரணமாக இந்தத் திட்டம் கடந்த 9 ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி மதுரை வந்த பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு முதல் செங்கல்லை நட்டு வைத்தார்.
ஆனால் அதன் பின்னர் இன்று வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான எந்த பணிகளும் நடைபெறாமல் இருந்து வருகிறது. மதுரை எய்ம்ஸ் உடன் அறிவிக்கப்பட்ட பிற எய்ம்ஸ் மருத்துவமனைகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு விட்டாலும், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இன்னும் நடைபெறவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டு, எல் அன்ட் டி நிறுவனத்திற்கு கட்டுமான டெண்டர் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த மே மாதம் கட்டுமான பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்தின் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.2021 கோடி. முதற்கட்டமாக மருத்துவக் கல்லுாரி, அவசர சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகளுக்கான வார்டு, மாணவர்களுக்கான விடுதிகளை 18 மாதங்களுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனையின் மொத்த கட்டுமான பணிகளும் 33 மாதங்களில் முடிக்கப்படும். 2 லட்சத்து 31ஆயிரத்து 782 சதுர மீட்டர் பரப்பளவில் 42 பிரிவு கட்டடங்களாக கட்டுமானம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை குறித்து மதுரையில் எய்ம்ஸ் செயல் இயக்குநர் ஹனுமந்தராவ் கூறுகையில், "டெண்டர் வெளியிடும் போதே குறிப்பிட்டப்பட்டது போல முதற்கட்டமாக விடுதி மற்றும் வகுப்பறை கட்டுமான பணிகள் 18 மாதங்களில் நிறைவு பெறும்.
டிசம்பர் 2025-ல் முதற்கட்ட பணிகள் முடிந்த பின் எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரிக்கான மாணவர்கள் சேர்க்கை நேரடியாக இங்கு நடைபெறும். முதற்கட்டமாக 150 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை தயாராகி வருகிறது. மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வசதியாக இந்த மருத்துவமனையில் பொதுமருத்துவம், மகப்பேறு உட்பட அனைத்து நோய் சார்ந்த துறைகளும் அமைக்கப்படும்.
இரண்டாம் கட்டத்தில் 750 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாறும் போது மதுரை அரசு மருத்துவமனையைப் போன்று சிறப்பு மருத்துவமனையாக செயல்படும்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications