மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடக்கம்.. 5 ஆண்டுக்கு பிறகு வேகமெடுக்கும் வேலை.. 2026ல் திறக்க முடிவு
மதுரை: மதுரை தோப்பூரில் கிடப்பில் போடப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. மொத்தம் ரூ.1977.80 கோடியில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகளை 2026க்குள் முடித்து திறக்கும் வகையில் பணி விரைவாக நடைபெற உள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து இடம் தேடும் பணி விறுவிறுப்பாக தொடங்கியது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். சுமார் 224.24 ஏக்கரில் ரூ.1,264 கோடியில் மருத்துவமனை அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு பணிகள் விரைந்து முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கட்டுமான பணிகள் நடக்கவில்லை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டது. பிற பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதுதொடர்பாக 2021ல் ஆட்சியை பிடித்த திமுக அரசு மற்றும் மத்திய அரசுக்கு இடையே கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டது. மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதாக திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கூறினர். ஆனால் அதனை மறுத்த மத்திய அரசு, அடிக்கல் நாட்டிய பிறகு கொரோனா பரவல் தொடங்கியது. இதனால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு கடனான பங்களிப்பு செய்யும் ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் பணத்தை விடுவிக்கவில்லை. மேலும் தமிழக அரசும் நிலத்தை ஒப்படைப்பதில் தாமதம் செய்தது என கூறியது.
இதனால் அவ்வப்போது மதுரை எய்ம்ஸ் தொடர்பாக மத்திய அரசுக்கும், திமுக அரசுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் வெடிக்கும். இதற்கிடையே தான் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‛‛
மதுரை எய்ம்ஸ் பணிக்கான மதிப்பீடு என்பது ரூ.1977.80 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தம் 870 படுக்கைகள் இடம்பெற உள்ளது. மேலும் 30 படுக்கையுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சைக்கான அறை, 150 எம்பிபிஎஸ் மாணவர்கள், செவிலியர்கள் படிக்கும் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் மாணவ-மாணவிகளுக்கான தனித்தனி விடுதிகள், இயக்குனர்களுக்கான இல்லம், பணியாளர்களுக்கான குடியிருப்புகள், வணிக வளாகம், ஆகியவை கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் எய்ம்ஸ் பணியை முழுவதுமாக 33 மாதத்தில் முடித்து 2026ம் ஆண்டில் மருத்துவமனை திறக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை எல் அண்ட் டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் அடிக்கல் நாட்டிய 5 ஆண்டுகளுக்கு பிறகு எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான வாஸ்து பூஜை, நிலத்தை சரிசெய்யும் பணி தொடங்கியது. இதையடுத்து தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி தொடங்கி உள்ளது. ஜேசிபி வாகனம், பொக்லைன் வாகனங்களின் உதவியுடன் கட்டுமான பணி நடந்து வருகிறது. இது மகிழ்ச்சியான செய்தியாகும்.
முன்னதாக கடந்த 2021 சட்டசபை தேர்தல் சமயத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாமல் இருப்பதை திமுக பெரிய பிரசாரமாக செய்தது. அதோடு பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தது. குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த தேர்தல் சமயத்தில் ‛எய்ம்ஸ்' என எழுதப்பட்ட செங்கல்லை தூக்கி வைத்து பிரசாரம் செய்தார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதாக கூறிய மத்திய அரசு வெறும் பூமிபூஜை மட்டுமே செய்துள்ளது. தமிகழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது என விமர்சனம் செய்தார். அதன்பிறகு தற்போதைய லோக்சபா தேர்தல் பிரசாரத்திலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‛எய்ம்ஸ்' என எழுதப்பட்ட செங்கலுடன் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது மதுரை எய்ம்ஸின் முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications