மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு - திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்வு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 222.47 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு தந்துள்ளது. நில ஒப்படைப்பு சான்றிதழை நவம்பர் 3ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அனுப்பி இருக்கிறார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரை: தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்திற்கு 1,264 கோடி என்று மத்திய அரசு குறிப்பிடப்பட்டு வந்த நிலையில், 2,000 கோடியாக உயர்ந்துள்ளதாக புதிய தகவலை தெரிவித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 222.47 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒப்படைத்துள்ளதாகவும் அதற்கான சான்றிதழை நவம்பர் 3ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அனுப்பி இருக்கிறார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் 199.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடியில் உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் மத்திய சாலை திட்டத்தின் கீழ் ரூ.21.10 கோடியில் ஆஸ்டின்பட்டி முதல் கரடிக்கல் வரையிலான 12 அடி அகலம் கொண்ட கிராம சாலையை 60 அடி அகலத்திற்கு நான்கு வழிச்சாலையாக உருவாக்கும் பணி தொடங்கியது. 12 இடங்களில் தரைப்பாலம் அமைத்தல் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு, 'இன்னும் மாநில அரசு நிலத்தை ஒப்படைக்கவில்லை' என, மத்திய அரசுதெரிவித்தது. இதை மாநில அரசு மறுத்தது. இந்த விவகாரம் சர்ச்சையானது. தற்போது மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு இரண்டாயிரம் கோடி ரூபாயாக உயர்ந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி மூலம் தெரியவந்துள்ளது.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டிய ராஜா தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எய்ம்ஸ் நிலம், கட்டுமான பணி, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ்க்கு கடன் வழங்குவது தொடர்பாக, இந்தியாவில் உள்ள ஜிக்கா அதிகாரிகள், ஜப்பான் ஜிக்கா அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் டிசம்பர் 24ஆம் தேதி நடந்தது. 2021 மார்ச்சில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். மொத்த மதிப்பீடு, 2,000 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் இதில், 85 சதவிகிதத்தை ஜிக்கா வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையோடு சேர்ந்து அமையும் மருத்துவ, நர்சிங் கல்லுாரி வகுப்புகள், எய்ம்ஸ் கட்டடம் முழு வடிவம் பெற்ற பின்தான் துவங்கும். முன்கூட்டியே துவங்குவதற்காக, தற்காலிக கட்டடங்கள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021: எந்த ராசிக்காரர்களுக்கு பொற்கால ஆண்டு.. அதிர்ஷ்டம் தேடி வரும்
இதுவரை, எய்ம்ஸ் திட்டத்திற்கு, 1,264 கோடி என்றே குறிப்பிடப்பட்டு வந்த நிலையில், 2,000 கோடி என புதிய தகவலை மத்திய அரசு தந்துள்ளது. இதில், 85 சதவிகிதத்தை ஜிக்கா கடனாக தரும். எஞ்சிய, 15 சதவிகிதம் எப்படி பெறப்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு இன்னும் மாநில அரசு நிலத்தை ஒப்படைக்கவில்லை என முதலில் தெரிவித்த நிலையில் , தற்போது புதிய தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 222.47 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு தந்துள்ளது. நில ஒப்படைப்பு சான்றிதழை நவம்பர் 3ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அனுப்பி இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட போது 1264 கோடி ரூபாயாக இருந்த திட்ட மதிப்பீடு தற்போது 2000 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.