மதநல்லிணக்க தமிழ்நாட்டிலா இப்படி.. கடும் நடவடிக்கை தேவை.. ஹிஜாப் விவகாரத்தில் கனிமொழி ஆவேசம்
மதுரை: மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் தமிழகம் விளங்கும் நிலையில் மதுரை மேலூர் வாக்குச்சாவடியில் ஹிஜாப்பை அகற்ற கூறிய பாஜக பூத் ஏஜென்ட் மீது கடும் நடவடிக்கை எடுக்க திமுகவின் கனிமொழி எம்பி வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி தேர்தலில் 8வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் மக்கள் ஆர்வமாக வந்து ஜனநாயக கடமையை ஆற்றினர்.
இந்த வாக்குச்சாவடிக்கு இஸ்லாமிய பெண் ஒருவர் வாக்களிக்க வந்தார். ஹிஜாப் அணிந்திருந்த அவர் வாக்கு செலுத்த முயன்றார். அப்போது அங்கிருந்த பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜன், அந்த பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றிவிட்டு வாக்களிக்குமாறு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வெளியேற்றம்
மேலும் அந்த பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிரிராஜன் கத்தினார். இதனால் வாக்குச்சாவடியில் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும் ஓட்டுப்பதிவுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் அவரை வெளியேற்றும்படி திமுக, அதிமுக பிரமுகர்கள் கூறினார்கள். இதையடுத்து அவர் வெளியேற்றப்பட்டார். இன்னொருவர் முகவராக அனுமதிக்கப்பட்டார்.

விசாரிக்க உத்தரவு
இதுதொடர்பாக கிரிராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை கலெக்டருக்கு உத்தரவிடப்பட உள்ளதாக தமிழக தேர்தல் கமிஷனர் பழனி குமார் கூறினார். மேலும் அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

கனிமொழி கண்டனம்
இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழியும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‛‛மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய்த் திகழும் தமிழகத்தில், மதுரை மேலூர் நகராட்சி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணிடம், பாஜக பூத் நிர்வாகி ஹிஜாப்பை அகற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது. நல்லிணக்கத்திற்குத் தீங்கு விளைவிக்க முயன்ற அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

கர்நாடகத்தை தொடர்ந்து தமிழகம்
ஏற்கனவே கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் சில மாணவர்கள் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிஷால் அணிந்து கல்லூரி சென்றனர். தொடர் போராட்டங்கள் நடந்த நிலையில் கல்லூரிகளில் ஹிஜாப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் பாஜக பூத் ஏஜென்ட் ஒருவர் வாக்களிக்க வந்த பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்ற வலியுறுத்தி சர்சசையை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications