மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. சாதி, மதம் கூடாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை போட்ட முக்கிய உத்தரவு
மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த பல்வேறு தரப்பினர் முன்வந்த நிலையில், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகமே இணைந்து இப்போட்டியை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஜல்லிக்கட்டும் ஒன்று. விளையாட்டுக்காகதான் மனிதர்கள் தன்னை அடக்குகிறார்கள் என்கிற எந்த உணர்வும் இல்லாமல், மிருகத்திற்கே உரிய குணத்துடன் சீறி பாயும் காளையை அடக்குவது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. இதற்காக நீண்ட கால பயிற்சி அவசியம். அப்படி இருந்தும் கூட உயிர்ப்பலியை இந்த விளையாட்டில் தடுக்க முடியாது. இருந்தாலும், கடந்த 2000 ஆண்டுகளாக இந்த விளையாட்டின் மீதான ஆர்வம் கொஞ்சமும் தமிழர்களுக்கு குறையவில்லை.

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல் என பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தனிச்சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆண்டு தோறும் தை 1ம் தேதி தொடங்கும் இந்த போட்டியை நடத்த பல்வேறு அமைப்புகள் தீவிரமாக முயன்று வருகின்றன. கடந்த 1980 இந்த அமைப்புகளின் மோதல் தீவிரமடைந்ததால் அடுத்த 8 ஆண்டுகளாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியே நடக்கவில்லை. அதன் பின்னர் ஊர் மக்கள் சார்பில் போட்டி நடைபெற்றது.
அதேபோல இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜல்லிக்கட்டை நடத்த தென்கால் பாசன விவசாயிகள் சங்கமும், அவனியாபுரம் கிராம கமிட்டியும் மோதிக்கொண்டன. இதில் சாதிய தலையீடுகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. நீதிமன்றம், அரசு பொறுப்பேற்று ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று அறிவித்தது. இந்த ஆண்டுக்கான பஞ்சாயத்து ஒருவழியாக முடிந்த நிலையில், தற்போது 2024ம் ஆண்டுக்கான சலசலப்புகள் தொடங்கியுள்ளன.
அதாவது அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்க குறைந்த காலமே இருக்கும் நிலையில், மீண்டும் சில அமைப்புகள் தாங்கள்தான் போட்டியை நடத்துவோம் என்று உரிமை கோர தொடங்கியுள்ளன. இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், "தொடக்கத்தில் நாங்கள் ஊர் சார்பில் நடத்தி வந்தோம். ஆனால் 1989க்கு பின்னர் கிராம மக்கள் சார்பில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட சிலர் இந்த கமிட்டியின் முடிவை ஏற்காமல், தங்களை நிர்வாகிகளாக அறிவித்துக்கொண்டனர். இதுதான் பிரச்னைக்கு முதல் காரணம்" என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு போட்டியை நடத்த உரிமை கோரிய அமைப்புகள் நீதிமன்றத்தை நாடின. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
அதாவது, "இந்த ஆண்டும் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகமே இணைந்து நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டில் எவ்வித சாதி, மதத்தையும் புகுத்த வேண்டாம்" என்று நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே இந்த ஆண்டு ஜனவரி மாதம் இது தொடர்பான வழக்கில், ஜல்லிகட்டு போட்டியில் யாருக்கும் முதல் மரியாதை கொடுக்க வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications