டிச.3 ஆம் தேதி ஏன் தீபம் ஏற்றவில்லை? CISF-ஐ தடுத்தது யார்? நீதிபதி சுவாமிநாதன் கேள்வி
மதுரை: திருப்பரங்குன்றத்தில் டிச.3 ஆம் தேதி ஏன் தீபம் ஏற்றவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் விளக்கேற்ற அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மனுதாரர் ராமரவிக்குமார் தொடர்ந்தார். அந்த வழக்கின் மீது இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணை நடத்தினார். அப்போது அவர், "டிசம்பர் 3ஆம் தேதி திருப்பரங்குன்றம் தீபத் தூணில் ஏன் தீபம் ஏற்றவில்லை" என வினவினார்.
மலை உச்சி
அப்போது மனுதாரர், "மலை உச்சிக்கு எங்களை அனுமதிக்கவில்லை. போலீஸாரும் பாதுகாப்பு தரவில்லை" என்றார். அப்போது நீதிபதி சுவாமிநாதன், மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் படையை பாதுகாப்புக்காக அனுப்பினேனே? ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை? உங்களை தடுத்தது யார் என்பதை பதில் மனு தாக்கல் செய்யுமாறு சிஐஎஸ்எஃப் ஐஜிக்கு நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு என்ன
திருப்பரங்குன்றம் மலையில் உச்சி பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கம். இந்த நிலையில் இந்த முறை அதற்கு பதிலாக, தீபத் தூணில் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என கேட்டு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பாஜகவை சேர்ந்த ராம ரவிக்குமார், மனுத்தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி சுவாமிநாதன்
இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் மலை உச்சிக்கு சென்று ஆய்வு நடத்தி, தீபத் தூணில் தீபம் ஏற்றினால் அருகே இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறி தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.
கார்த்திகை தீபம்
ஆனால் தீபத்திருநாளில், வழக்கமாக ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோயிலிலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமரவிக்குமார், இந்து அமைப்பினர், பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது வன்முறையிலும் அவர்கள் ஈடுபட்டதாக சொல்லப்படுவதால் இரு காவலர்களின் மண்டை உடைந்தது. நீதிபதி சுவாமிநாதனின் ஒற்றை உத்தரவால் அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது என கண்டனங்கள் எழுந்தன.
நீதிமன்ற அவமதிப்பு
இந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களை தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை என கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ராம ரவிக்குமார், மதுரை கிளையில் தாக்கல் செய்தார். அந்த மனு மீது நேற்று மாலை விசாரணை நடத்திய சுவாமிநாதன், "திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை காரணம் காட்டி, மனுதாரரை தீபம் ஏற்ற அனுமதிக்காமல் போலீஸார் தடுத்துள்ளனர். எனவே அந்த 144 உத்தரவையே ரத்து செய்கிறேன்.
பாஜக போராட்டம்
மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் உடனே தீபம் ஏற்றுமாறு" நீதிபதி சுவாமிநாதன், மனுதாரருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து திருப்பரங்குன்றம் சென்ற ராம ரவிக்குமார் உள்ளிட்டோரை அங்கு போலீஸார் அனுமதிக்கவில்லை. அப்போது நடந்த பாஜகவினரும் இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தினர்.
நீதிபதி சுவாமிநாதன் கேள்வி
இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் நேற்று பிறப்பித்த உத்தரவு தொடர்பாக இன்று நீதிபதி சுவாமிநாதன் விசாரணை நடத்தினார். அப்போது, டிசம்பர் 3ஆம் தேதி தீபத் தூணில் ஏன் தீபம் ஏற்றவில்லை என கேள்வி எழுப்பிய அவர், வழக்கையும் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications