மதுரையில் மூக்கில் நுரை தள்ளியபடி பாஜக நிர்வாகி மர்ம மரணம்! இறப்பில் சந்தேகம் என புகார்!
மதுரை: மதுரையில் பாஜக நிர்வாகி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவரது இறப்பில் மர்மம் இருப்பதால் விசாரணை முடியும் வரை உடலை பெற மாட்டோம் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாநகர் எஸ்.ஆலங்குளம் டிசைன் நகர் 3 தெரு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் மனைவி ஜெயலட்சுமி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். மதுரை பாஜக ஓபிசி அணியினுடைய செல்லூர் மண்டல செயலாளராகவும் இருந்தார்.

மேலும் கருப்பசாமி கார் ஓட்டும் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற கருப்பசாமி நேற்று வரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை மதுரை கூடல் புதூர் பகுதியில் காரில் சடலமாக மீட்கப்பட்டார்.
இன்று காலையில் கூடல் புதூர் சர்ச் அருகே மூக்கில் நுரைவந்த நிலையில் கருப்பசாமியின் சடலம் காரில் இருந்து மீட்கப்பட்டது. இது தற்கொலையா? இல்லை கொலையா என தெரியவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் கூடல் புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக நிர்வாகி கருப்பசாமியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உரிய விசாரணை நடத்தும் வரை உடலை பெற மாட்டோம் என பாஜக நிர்வாகிகளும், கருப்பசாமியின் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.
திங்கள்கிழமை இரவு வீட்டிலிருந்து சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எனவே சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை, கோவை, ஈரோடு என ஆங்காங்கே கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications