மதுரையில் கோர்ட்டில் நீதிபதியையே அதிர வைத்த பாண்டியராஜன் பிரதர்ஸ்.. கண்ணாடியை உடைத்து மிரட்டல்
மதுரை: 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால் நீதிபதியை அவதூறாக 2 சகோதரர்கள் பேசியதுடன், அவருக்கு நீதிமன்றத்திலேயே மிரட்டல் விடுத்தனர். மதுரை மகபூப்பாளையத்தை சேர்ந்த பாண்டியராஜன், பிரசாந்த் ஆகிய 2 பேரும் ஆவேசமாக தகாத வார்த்தைகளில் நீதிபதியையும், போலீசாரையும் பேசினார்கள். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
மதுரை கீரைத்துறை போலீசார் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி அன்று வில்லாபுரம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது அங்கு உள்ள முனியாண்டி கோவில் அருகில் 25 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், இது தொடர்பாக மகபூப்பாளையத்தை சேர்ந்த 23 வயதாகும் பாண்டியராஜன், அவரது மனைவி சரண்யா (20), பாண்டியராஜனின் தம்பி ஜாக்கி என்ற பிரசாந்த் (22) ஆகிய 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு முதலாவது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் விஜயபாண்டியன் ஆஜர் ஆனார். மேற்கண்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. நேற்று அவர்களுக்கான தண்டனை விவரம் தெரிவிக்கப்பட்டது. இதில் 3 பேருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் அதிரடியாக தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பின் போது மேற்கண்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். தண்டனை தெரிவிக்கப்பட்ட பின்பு அவர்கள் 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். அப்போது பாண்டியராஜன், தங்களுக்கு தண்டனை விதித்ததால் ஆத்திரமடைந்து முதலாவது கோர்ட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்,
பின்னர் பாண்டியராஜன், பிரசாந்த் ஆகிய 2 பேரும் ஆவேசமாக தகாத வார்த்தைகளில் நீதிபதியையும், போலீசாரையும் பேசினார்கள். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு ஏராளமானவர்கள் கூடினார்கள். அப்போது ஆத்திரத்தில் ஜன்னல் கண்ணாடியை உடைத்ததால் பாண்டியராஜன் கைகளில் இருந்து ரத்தம் கொட்டியது. ஆனாலும் அதையும் பொருட்படுத்தாமல் அவரும், பிரசாந்தும் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து இருவரையும் போலீசார் மடக்கிப்பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நீதிமன்றத்தில் பல பேர் முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே போதைப்பொருள் தடுப்பு முதலாவது கோர்ட்டுக்கு வெளியே வராண்டா பகுதியில் பாண்டியராஜன், அவருடைய தம்பி ஆகியோர் ரகளையில் ஈடுபட்டு, நீதிபதியை அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications