முதல் முதலாய்.. மதுரையில் சிப்காட்.. 100 ஏக்கர் நிலத்தில் இப்பவே அதிரடி.. குஷியில் மேலூர் வஞ்சிநகரம்
மதுரை: தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்தபடி மதுரை அருகே உள்ள மேலூர் பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி, இதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் மேலும் ஒரு நல்ல தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் முதலாவது சிப்காட் தொழில் புத்தாக்க மையம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும், இரண்டாவது மையம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து 3-வது தொழில் புத்தாக்க மையம் மதுரையில் அமையவுள்ளது..

மதுரை சிப்காட்
மதுரை - தூத்துக்குடி தொழில் வளாகத்தில், மதுரைக்கு அருகில் சிப்காட், சிட்கோ மற்றும் எல்காட் ஆகியவற்றை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் தொழில் வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படுவது இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக மேலூர் பகுதியில் ஏற்கனவே 278 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது..
தமிழக அரசின் சிப்காட், அடுத்தடுத்து தொழிற்பூங்காக்களை அமைத்து வரும் வேளையில் மதுரை மேலூரில் சிப்காட், சிட்கோ மற்றும் எல்காட் ஆகிய 3 முக்கிய அமைப்புகளும் தொழிற்பூங்கா, ஐடி பார்க் ஆகியவற்றை அமைக்க முடிவு செய்துள்ளது. இதனால் இது தொடர்பான உள்கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது..
வஞ்சிநகரத்தில் 278 ஏக்கர்
இந்நிலையில், மேலும் ஒரு முக்கிய தகவல் வந்துள்ளது.. அதாவது, மேலுார் வஞ்சிநகரத்தில் 278 ஏக்கரில் அமைய உள்ள தொழிற்பூங்காவிற்கு டெண்டர் விடும் பணி ஆரம்பமாகியிருக்கிறதாம்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் 'சுற்றுச்சூழல் அனுமதி கோரி 8 B படிவத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நிறுவனமே 200 ஏக்கர் நிலத்தை ஒப்பந்த அடிப்படையில் பெறுவதாக இருந்தாலும் வாய்ப்பளிக்கப்படும். அல்லது 4 ஏக்கர் அல்லது 5 ஏக்கர் அளவில் நிலம் பிளாட் ஆகவும் பிரித்து வழங்கப்படும்.
அடிப்படை கட்டமைப்பு வசதிகள்
மேலும் தொழில் துவங்குவதற்கான அடிப்படை வசதிகள் இருந்தால் தான் முதலீட்டாளர்கள் தொழில் துவங்க முன்வருவார்கள் என்பதால், முதல் கட்டமாக 100 ஏக்கரில் அடிப்படை வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.13 கோடிக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்யும் நிறுவனங்களுக்கான 'டெண்டர்' விடப்பட்டுள்ளது..
சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, தெருவிளக்கு, சிப்காட் அலுவலகம் அமைத்த பிறகே, தொழில் நிறுவனங்களுக்கான பிளாட்கள் ஏலம் விடுவதற்கான டெண்டர் பணி ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த தொழில் பூங்காவில் சுமார் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பெருகும் வேலைவாய்ப்புகள்
ஆனால்,வரும் 2026 ஜனவரியில் முதலீட்டாளர்களுக்கான பிளாட்கள் தயாராகி விடும் என்பதால் தொழில் துவங்கும் நிறுவனங்கள் மூலம் குறைந்தது 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.
அந்தவகையில், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என அரசு சார்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதைவிட முக்கியமாக வரப்போகும் தொழிற்பூங்கா மூலம் மதுரை மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியும் உயர போகிறது. இதனால், தொழில் வளர்ச்சியிலும் மதுரை முன்னணி மாவட்டமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications