இதுதாம்லே OG செலிபிரேஷன்.. தேவா பாட்டை எடுத்து வைங்க மக்கா! அழகர் கிளம்பிட்டாரு! அதிருது மதுரை!
மதுரை: கள்ளழகர் சித்திரைத் திருவிழா தொடங்கிய நிலையில், விழாக்கோலம் பூண்டுள்ளது மதுரை. மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள் கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் மூன்றுமாவடி பகுதிக்கு வந்தடைந்தார் கள்ளழகர். கோவிந்தா, கோவிந்தா என பக்தி
முழக்கத்தோடு சர்க்கரை தீபம் ஏந்தியபடியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் எதிர்சேவை வரவேற்பு அளித்தனர் ஆயிரக்கணக்கான பக்தர்கள்.
திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என புகழ்ந்து அழைக்கப்படுவது, 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானதுமான மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரை திருவிழா 27 ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் நேற்று மாலை சுந்தராஜபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக தங்கப்பல்லக்கில் அழகர்மலையிலிருந்து நேற்று மாலை மதுரையை நோக்கி புறப்பாடாகினார்.
பின்னர் அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, கன்னனேந்தல் வழியாக வந்த கள்ளழகர் தற்போது மதுரை மாநகர் பகுதியான மூன்றுமாவடி பகுதிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார். மதுரை மாநகர் பகுதிக்கு வந்தடைந்த கள்ளழகருக்கு பிரமாண்டமாக எதிர்சேவை நடைபெற்று வருகிறது. எதிர்சேவையின் போது பக்தர்கள் கருப்பசாமி வேடமிட்டு ஆடல்பாடல்களுடன் வரவேற்றுவருகின்றனர்.
பெண்கள் கையில் சர்க்கரை தீபம் ஏந்தியபடி கள்ளழகரை வரவேற்று சாமி தரிசனம் செய்துவருகின்றனர். மேலும் கள்ளழகர் முன்பாக பல்வேறு இசை வாத்தியங்கள் முழுங்கவும், கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியபடியும் கருப்பசாமி வேடமி்ட்ட பக்தர்கள், அனுமர் வேடமிட்டும் பக்தர்கள் ஏராளமானோர் கள்ளழர் எதிர்சேவையின் போது வருகை தருகின்றனர்.
மாநகர் பகுதிக்குள் நுழைந்த கள்ளழகரை மனம் குளிர்வித்து வரவேற்கும் வகையில் தோல்பைகளால் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றுவருகின்றனர. வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிய கள்ளழகர் எதிர்சேவையும் நடைபெற்றுவருகிறது. எதிர்சேவையின் போது . மூன்றுமாவடியில் இருந்து புறப்பாடாகிய கள்ளழகர் சர்வேயர் காலனி, புதூர், டி.ஆர்.ஓ.காலனி, உள்ளிட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி மாலை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள மண்டகப்படியில் எழுந்தருளவுள்ளார்.
அழகர்கோவில் புறப்பாடு முதல் மீண்டும் கோவிலுக்கு திரும்பும் வரை சுமார் 494 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். இதனை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதியில் 5ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை மாநகரில். கள்ளழகர் எதிர்சேவையை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், சிசிடிவி கேமிராக்கள் அமைத்தும் பாதுகாப்பு பணிகளை மாநகர காவல் ஆணையர் அபிஷேக் தீக்ஷித் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்சேவை நிகழ்வை தொடர்ந்து இன்று இரவு தல்லாகுளம் அம்பலகார மண்டகப்படியில் எழுந்தருளும் கள்ளழகர் நள்ளிரவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார். பின்னர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏற்று ஆயிரம்பொன் சப்பரத்தில் காட்சியளிப்பார்.
அதனை தொடர்ந்து தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடாகி நாளை அதிகாலை வெள்ளி குதிரை வாகனத்தில் வீர ராகவ பெருமாள் வரவேற்க கள்ளழகர் வைகையாற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் எழுந்தருளவுள்ளார். இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. கள்ளழகர் எதிர்சேவையின் போது மதுரை மாநகர் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்திகோஷங்கள் எழுப்பியபடி தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி கள்ளழகரை வரவேற்று வருகின்றனர்.













Click it and Unblock the Notifications