கோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. மதுரை சித்திரை திருவிழாவில் உற்சாகம்!
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது. திருக்கல்யாண நிகழ்வு நிறைவடைந்ததும் பெண்கள் மாங்கல்ய நாண் மாற்றினர்.
உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று, ஏப்ரல் 21ஆம் தேதி மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து, நாளை திருத்தேர் உற்சவமுமும், செவ்வாய்க்கிழமை கள்ளழகர் வைகையில் எழுந்தருளலும் நடைபெற உள்ளன.

பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரைக்கு பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் மீனாட்சி அரசாளும் ஊர் என்பது கூடுதல் சிறப்பு. இங்கே தினம் தினம் திருவிழாதான் என்றாலும், சித்திரை திருவிழா மிகவும் சிறப்பானது.
சித்திரை விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மீனாட்சியம்மன் மதுரை மாநகரின் ஆட்சிப் பொறுப்பேற்கும் விதமாக நேற்று முன்தினம் பட்டாபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, மீனாட்சி அம்மன், சிவபெருமானை போருக்கு அழைக்கும் நிகழ்வான திக் விஜயம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து, சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை 8.35 மணிக்கு மேல் தொடங்கியது. 8.52 மணியளவில் மீனாட்சி அம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கப்பட்டது.
திரளான பக்தர்கள் முன்னிலையில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், இந்நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் புது தாலிக்கயிறு மாற்றிக்கொண்டனர்.
திருக்கல்யாணம் முடிந்த பின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிப்பார்கள். மாலையில் சுந்தரேஸ்வரர் யானை வாகனத்திலும், மீனாட்சி பூப்பல்லக்கிலும் வீதி உலா வருவார்கள். இந்தத் திருக்கல்யாணத்தை தரிசிப்பவர்களுக்கு நிறைவான வாழ்க்கையும், திருமணம் தடைபடுபவர்களுக்கு நல்ல வரனும் அமையும் என்பது ஐதீகம்.
திருக்கல்யாண நிகழ்வுக்காக கோயிலுக்குள் வடக்கு - மேற்கு ஆடி வீதி சந்திப்பில் ரூ.30 லட்சம் செலவில் சுமார் 10 டன் எடையுள்ள பல வண்ணப் பூக்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆர்கிட் பூக்கள், கொடைக்கானலில் இருந்து வரவழைக்கப்பட்ட கார்னேசன், ஜெர்புரா, கோல்டன்ராடு, ஆஸ்கரஸ் போன்ற பூக்களால் மேடை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வண்ண பட்டுத் துணிகளாலும் மேடை அழகூட்டப்பட்டது.
பக்தர்கள் அமர்ந்து மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண்பதற்கு வசதியாக மேற்கு ஆடி வீதியில் 700 அடி நீளத்திற்கும், வடக்கு ஆடி வீதியில் சுமார் 700 அடி நீளத்திற்கும் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாணக் காட்சியை பொதுமக்கள் கண்டுகளிக்க வசதியாக சித்திரை வீதிகள் உட்பட 20 இடங்களில் பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் குவிந்துள்ளனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு, 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications