கள்ளழகர் புறப்பாடு.. மதுரையில் பல இடங்களில் இன்று போக்குவரத்து மாற்றம்.. கடும் கட்டுப்பாடு.. விபரம்
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவிவின் கள்ளழகம் மதுரை புறப்பாடு இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, வாகனங்கள் நிறுத்தவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று காலை மிதுன லக்னத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். இதைதொடர்ந்து அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மாநகர் முழுவதும் விழாக்கோலமாக காட்சி அளிக்கிறது.
போக்குவரத்து மாற்றம்: இந்நிலையில் தான் கள்ளழகர் மதுரை புறப்பாடு நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. இதனால் மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் நிறுத்தவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு: மதுரையிலிருந்து அழகர்கோவில் நோக்கி கடச்சனேந்தல் மற்றும் அப்பன்திருப்பதி வழியாக வரும் அனைத்து வாகனங்களும் மே 03ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு மேல் மதுரை -அழகர்கோவில் சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

வாகனம் நிறுத்தம்: கேரளா நீட் அகாடமியில் நான்கு சக்கர வாகனம் நிறுத்தப்பட வேண்டும். மாங்காய் தோட்டத்தில் டாடா ஏஸ் மற்றும் சிறிய ரக சரக்கு வாகனம் நிறுத்த வேண்டும். பொய்கைகரைப்பட்டி தெப்பம்(தற்காலிக பேருந்து நிலையம்) இரு சக்கர வாகனம் நிறுத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 3 ம் தேதி மதுரையிலிருந்து அழகர் கோவிலுக்கு வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பிற்பகல் 3.30 மணி வரை அழகர் கோவில் வளாகத்திற்குள் வந்து செல்லலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூட் எப்படி: அதோடு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மேல் மதுரையிலிருந்து அழகர் கோவிலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் (அரசுப் பேருந்துகள் உட்பட) மதுரை-அழகர்கோயில் சாலையில் கடச்சனேந்தல் வந்து இடதுபுறம் திரும்பி ஊமச்சிகுளம், சத்திரப்பட்டி வழியாக பொய்கைகரைப்பட்டி தெப்பம் வந்து அங்குள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, திரும்பி சத்திரப்பட்டி, ஊமச்சிகுளம், கடச்சனேந்தல் வழியாக மதுரை செல்ல வேண்டும்.
ரைஸ்மில் பார்க்கிங்: மேலூரிலிருந்து அழகர் கோவில் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் 03.05.2023-ஆம் தேதி அன்று பிற்பகல் 3.30 மணிக்கு மேல் மேலூர் -அழகர்கோவில் சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கீழ்கண்ட வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். அம்மன் மகால் அருகே இரு சக்கர வாகனங்களம், பிரகாஷ் அய்யர் கார்டன் (மகாத்மா மாண்டிசோரி பள்ளிசந்திப்பு ) இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களும், முத்துலெட்சுமி ரைஸ்மில் பார்க்கிங் - இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களும், ஐஸ்வர்யா கார்டன்
(தற்காலிக பேருந்து நிலையம்) , நாகம்மாள் கோயில் அருகே - நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தப்பட வேண்டும்.
பஸ்களுக்கு அறிவுரை: மேலும் இன்று மேலூரிலிருந்து அழகர்கோவிலுக்கு வரும் அரசுப்பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் பிற்பகல் 3.30 வரை அழகர்கோயில் வளாகம் வரை வந்து செல்லலாம். பிற்பகல் 3.30 மணிக்குமேல் மேலூர் சாலையில் ஐஸ்வர்யா கார்டன் பார்க்கிங் அருகே உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு அங்கிருந்து திரும்பி மீண்டும் மேலூர் செல்ல வேண்டும்.

டூவீலர் பார்க்கிங்:பிற்பகல் 3.30 மணிக்குள் அழகர் கோயிலுக்கு வாகனங்களில் வருபவர்கள் தேரோடும் வீதிகளில் வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை. இரு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்களை தேரோடும் வீதியின் மேற்கு பக்கத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்த வேண்டும். விஐபி மற்றும் விவிஐபி கார்கள் மட்டும் தெப்பத்தின் கீழ்புறம் உள்ள வாகனநிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம்.
பஸ்-வேன் நிறுத்தம்: பஸ், வேன், டாடாஏஸ் மற்றும் கார் ஆகிய வாகனங்களில் வருபவர்கள் தேரோடும் வீதியை தவிர்த்து தேரோடும் வீதியின் கிழக்கு பக்கம் உள்ள அந்தந்த வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். அரசுத்துறை வாகனங்கள் அதற்கெனஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சுந்தரராச பெருமாள் கோவில் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
போலீஸ் எச்சரிக்கை: கோயிலின் உட்புறத்தில் நிறுத்தப்படும் அனைத்து வாகனங்களும் கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டு கோட்டைவாசல் வந்து இடதுபுறம் திரும்பிசென்று மேலூர் ரோடு மண்டகப்படி முடித்து, மதுரை ரோடு மண்டகப்படி வந்தடைந்து, சத்திரப்பட்டி சந்திப்பு கடந்து செல்லும் வரை கோவில் வளாகத்திற்குள் இருந்துஎந்த வாகனமும் மதுரை சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் அனைத்தும் மேலூர் சாலை வழியாக மதுரை செல்ல வேண்டும். காவல்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களை தவிர அழகர் கோவிலில் இருந்து கடச்சனேந்தல் சந்திப்பு வரை சாலையின் இருபுறமும் எக்காரணத்தை கொண்டும் எந்த வாகனங்களையும் நிறுத்தக் கூடாது.












Click it and Unblock the Notifications