ரூ. 7.95 கோடி வாடகை பாக்கி தள்ளுபடி! மதுரை மாநகராட்சி அதிரடி! வியாபாரிகள் மகிழ்ச்சி
மதுரை: மதுரை மாநகராட்சியில் கொரோனா காலத்தில் பூட்டியிருந்த கடைகளுக்கு ரூ 7.95 கோடி வாடகை பாக்கியை மாநகராட்சி நிர்வாகம் தள்ளுபடி செய்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது அந்த கடைக்காரர்களுக்கு பேருதவியாக இருந்ததாக தெரிவிக்கிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா முதல் அலை, 2-ஆவது அலை வீசிய காலகட்டங்களில் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். அத்தியாவசிய அரசு துறைகள் தவிர மற்ற அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

பள்ளிகள், கல்லூரிகள் செயல்படவில்லை. பொதுமக்கள், காய்கறிகள், உணவுப் பொருட்கள் வாங்க மட்டுமே பாதுகாப்பாக முகக் கவசம் அணிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தனர். பிறகு வீட்டிற்கு போய் முகம், கை, கால்களை எல்லாம் சுத்தமாக கழுவிக் கொண்டு வாங்கிய காய்கறிகளை மஞ்சள் தூள், உப்பு போட்டு கழுவி, ஈரம் காய்ந்தவுடன் எடுத்து பிரிட்ஜில் வைத்தனர்.
உணவு டெலிவரி கொடுக்க யார் வந்தாலும் நேரடியாக கையில் பொருட்களை வைக்காமல் வாசலில் வைத்துவிட்டு சென்றனர். அதன் பிறகு கொரோனா தடுப்பூசி போட்டதை அடுத்து அந்த தொற்று கட்டுக்குள் வந்தது. அது போல் நகைக் கடைகள், துணிக் கடைகள், பேன்ஸி கடைகள் என பெரும்பாலான கடைகள் மூடியே இருந்தன.
இதனால் வியாபாரம் இல்லாமல் அவர்கள் பொருளாதார ரீதியில் துன்பமடைந்தனர். கடனை வாங்கி வியாபாரம் செய்தவர்கள் எல்லாம் வட்டிக் கட்ட முடியாமல் திணறினர். இந்த நிலையில் பேருந்துகளும் இயக்கப்படாததால் பேருந்து நிலையங்கள் பயணிகள் வராமல் மூடப்பட்டிருந்தன.
அதனால் தமிழகம் முழுவதும் கொரோனா அலை நிலவிய கால கட்டத்தில் பேருந்து நிலையங்கள், பொது இடங்களில் செயல்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு சொந்தமான கடைகள் மூடப்பட்டன. இதனால் வியாபாரிகள் பெரிய அளவில் நஷ்டமடைந்தனர். கொரோனா காலகட்டத்தில் அன்றாட வாழ்வாதாரத்துக்கே சிரமப்பட்டனர்.
இதையடுத்து கொரோனா தொற்று பேரிடரில் இருந்து மீண்டு இயல்பு நிலை திரும்பி மீண்டும் கடைகளை திறந்த போது உள்ளாட்சி அமைப்புகள் கொரோனா காலகட்டத்திற்கும் சேர்த்து வாடகை செலுத்தும்படி கேட்டு வியாபாரிகளுக்கு நெருக்கடி கொடுத்தன. அதனால் வியாபாரிகள் வேறு வழியில்லாமல் வாடகையை செலுத்தினர்.
மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை டெண்டர் எடுத்தவர்கள், மாநகராட்சிக்கு மாதந்தோறும் வாடகை செலுத்தி வந்தனர். கொரோனா காலத்தில் வியாபாரம் இன்றி கடைகளை பூட்டி இருந்தாலும் மாநகராட்சி நெருக்கடி அளித்ததால் வாடகை செலுத்தினர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கடைகளை டெண்டர் எடுத்தவர்கள், கொரோனா காலத்தில் கடைக்கான வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதை ஆய்வு செய்த தமிழக முதல்வர் , கொரோனா காலத்தில் முதல் அலையின் போது 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடியவும் இரண்டாம் அலையின் போது 2021 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையும் உள்ள காலங்களில் மாநகராட்சி கடைகளுக்கு வாடகையை தள்ளுபடி செய்வதற்கு அரசாணை (337) வெளியிட்டது.
அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி கடைகளுக்கு வாடகையான ரூ 7.95 கோடியை , மாநகராட்சி ஆணையர் தள்ளுபடி செய்தார். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications