நிச்சயமான மகள்.. காதலனுடன் சென்றதால் விரக்தி அடைந்த தம்பதி.. உசிலம்பட்டியில் நடந்த விபரீதம்
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மகள் காதலனுடன் சென்றுவிட்டதால் விரக்தி அடைந்த தம்பதி, திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
காதல் திருமணம் பெரும்பாலும் பெற்றோருக்கு வலியையே தருகிறது. முதிர்ச்சி அற்ற பருவத்தில், அதாவது 16 முதல் 19 வயது வரை உள்ள டீன் ஏஜ் பெண்கள், காதலில் விழும் போது, பக்குவம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்போது அவர்களுக்கு வாழ்க்கையின் எதார்த்தங்கள் புரிவது இல்லை..

திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்கள் வயது 21, 20, 22 என முதிர்ச்சி அற்றதாக உள்ளது. காதலி மீது உள்ள மோகம் மற்றும் ஆசையில் ஒடிப்போகிறார்கள். ஆனால் வேலை இல்லாமல், வருமானம் இல்லாமல், உதவிகள் இல்லாமல், விட்டுக்கொடுக்கும் மனபக்குவமும் இல்லாமல் சிக்கலான நிலையை சந்திக்கிறார்கள்.. இதனால் வாழ்க்கையில் தவறான முடிவுகள் விரைவிலேயே எடுக்கும் நிலை ஏற்படுகிறது.
இதேபோல் பெற்றோரும், தங்கள் பிள்ளை இப்படி தவறான முடிவு எடுத்துவிட்டாளே என்று வேதனையில் விபரீத முடிவு எடுக்கிறார்கள்.. பெற்றோர்கள் பிள்ளைகள் காதலில் விழுந்தால் பக்குவமாக கையாளத்தெரியாமல் உணர்ச்சி வேகத்தில் முடிவெடுத்து வாழ்க்கையை நரகமாக்கி விடுகிறார்கள். அப்படியான சம்பவம் தான் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயன்மேட்டுப்பட்டியைச் சேர்ந்த செல்வம் (வயது 47). இவருடைய மனைவி வான்அழகி (43). இவர்கள் தங்கள் கிராமத்தில் விவசாய கூலிவேலை செய்து வருகிறார்கள். செல்வம் வான்அழகி தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளார்கள்.
ஞாயிறு அன்று வீட்டில் விஷம் குடித்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் மயங்கி கிடந்தார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்துபோனார்கள்.
இது குறித்து தகவல் அறிந்தது வந்த உசிலம்பட்டி சிந்துபட்டி போலீசார் 2 பேரின் உடல்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இவர்களது மகளுக்கு, உறவினர் ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த பெண், காதலனுடன் சென்று விட்டார். இதில் விரக்தி அடைந்த கணவனும், மனைவியும் விஷம் குடித்து உயிரை விட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications