மதுரை மொத்தமா மாறப்போகுது.. 90% முடிவடைந்த அப்போலோ சந்திப்பு மேம்பாலம்.. எப்போது திறப்பு?
மதுரை: மதுரை மேலமடை அப்போலோ மேம்பாலத்தின் பணிகள் 90 சதவிகிதம் முடிவடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் நவம்பர் மாதம் கடைசி வாரம் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் இந்த பாலம் திறந்து வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மதுரையில் இரு சக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் உச்சத்தில் இருக்கிறது. வைகை ஆற்றை கடப்பதற்காக போடப்பட்ட பாலங்களை கடந்து பெரியளவில் எங்கும் பாலங்கள் கட்டப்படவில்லை. இதனால் மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் பாலம் கட்டப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

குறிப்பாக கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருந்து வந்தது. இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் 2 மேம்பாலங்கள் கட்ட அடிக்கல் நாட்டினார். கோரிப்பாளையம் மேம்பாலம் அமைக்க ரூ.190.40 கோடியும், மேலமடை அப்போலோ சந்திப்பு மேம்பாலத்திற்கு ரூ.150.28 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மேலமடை அப்போலோ மேம்பாலப் பணிகள் நீண்ட நாட்களாக இழுத்து கொண்டே செல்கிறது. இந்த மேம்பாலம் மதுரை ஆவின் சந்திப்பில் இருந்து கோமதிபுரம் 6வது சந்திப்பு வரை கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் 1,100 மீட்டர் நீளத்திற்கு 30 தூண்களுடன் நிறுவப்பட்டு வருகிறது.
அதேபோல் 17.2 மீட்டர் அகலம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மழைநீர் வழிந்தோடுவதற்கு ஏதுவாக நவீன வசதிகளுடன் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் வரும் பட்சத்தில் மதுரையில் இருந்து சிவசங்கைக்கு எளிதாக பயணம் அமையும். அதேபோல் பாண்டி கோயில் சாலை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை எந்த போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் அடைய முடியும்.
அண்மையில் இந்தப் பாலத்தின் பணிகள் எப்போது முடியும் என்று சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்ட போது அமைச்சர் எவ வேலு, நவம்பர் மாதத்தில் திறக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடப்பதாக தெரிவித்திருந்தார். அதற்கேற்ப தற்போது மேலமடை மேம்பாலம் பணிகள் 90 சதவிகிதம் வரை முடிவடைந்துள்ளது. இன்னும் 10 சதவிகித பணிகள் மட்டுமே இருக்கும் நிலையில், நவம்பர் மாதத்தில் முடிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.
இதனால் டிசம்பர் முதல் வாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்த பாலத்தினை திறந்து வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கான பணிகளை தமிழக அரசு மும்முரமாக மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்து வரும் ஸ்டாலின், விரைவில் மதுரைக்கு வருவார் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications