பாஜகவிலிருந்து இன்று விலகுகிறார்- மதுரை டாக்டர் சரவணன்.. காலை ராஜினாமா செய்கிறார்!
மதுரை: பாஜகவிலிருந்து இன்று காலை விலகுவதாக அறிவித்துள்ள டாக்டர் சரவணன் தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறார்.
Recommended Video
75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தேசியக் கொடி ஏற்றிய காரில் பயணம் செய்தார்.
அப்போது மதுரை விமான நிலையத்தில் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர சரவணன் தலைமையில் பாஜகவினர் கூட்டமாக இருந்ததை அமைச்சர் கண்டார்.
பாஜக வேண்டாம்.. முழுக்கு போட்ட டாக்டர் சரவணன்.. பிடிஆரை சந்தித்து மன்னிப்பு கேட்ட கையோடு அறிவிப்பு
அரசு சார்பில் மரியாதை
இது அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, இங்கு ஏன் அவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் வேண்டுமானால் வீரமரணமடைந்த லட்சுமணனின் வீட்டுக்கே சென்று அஞ்சலி செலுத்தட்டும் என போலீஸாரிடம் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக தெரிகிறது.
போலீஸார்
இதையடுத்து போலீஸார் அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருடன் பாஜக சரவணன் உள்ளிட்டோர் வாக்குவாதம் செய்தனர். இந்த நிலையில் பிடிஆர் பழனிவேலின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசினர். இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
தேசியக் கொடி
தேசியக் கொடி ஏற்றப்பட்ட காரில் பயணம் செய்த அமைச்சரின் கார்மீது காலணி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பிரச்சினையை பாஜகவுக்கு கொடுத்தது. இதைத் தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் நள்ளிரவில் அமைச்சர் பிடிஆர் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.
பாஜகவிலிருந்து விலகுகிறேன்
இதைத் தொடர்ந்து அவர் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில் எனக்கு வெறுப்பு அரசியல், மத அரசியல் ஒத்துவரவில்லை. எனது மனதில் உள்ள விஷயத்தை அமைச்சரிடம் தெரிவித்தேன். நான் பாஜக கட்சியில் தொடரவில்லை. பாஜகவில் நான் தொடரப்போவதில்லை. இன்று காலை ராஜினாமா கடிதத்தை கொடுப்பேன். சுயமரியாதையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
விலகல் கடிதம்
மேலும் தனது விலகல் கடிதத்தை இன்று வழங்குவதாக அறிவித்துள்ளார். எனவே இன்று காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார். திமுகவில் இணைவீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு திமுக எனது தாய் வீடு, இணைந்தால் என்ன தவறு என கேட்டிருந்தார். இதையடுத்து அவர் திமுகவில் இணைவது குறித்தும் இன்று தெரியவரும்.