மத அரசியல் ஒத்துவரவில்லை! சுயமரியாதை தான் முக்கியம்! பாஜகவுக்கு தண்ணீர் காட்டிய டாக்டர் சரவணன்!
மதுரை: மத அரசியலும் வெறுப்பு அரசியலும் தனக்கு ஒத்து வராததால் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் மதுரை மாநகர மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் சரவணன்.
Recommended Video
அது மட்டுமல்லாமல் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் இரவோடு இரவாக நேரில் சந்தித்து மன்னிப்பும் கோரியிருக்கிறார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக மாலையில் ஆக்ரோஷமாக பேட்டியளித்த சரவணன் அடுத்த சில மணி நேரங்களில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதற்கான காரணம் பற்றி இங்கே பார்க்கலாம்.

டாக்டர் சரவணன்
மதுரை டாக்டர் சரவணனை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் மிஸ்டர் கூலாக இருக்கக்கூடியவர். அதிர்ந்து பேசாத குணம் உடையவர். அரசியலை நம்பி வருமானம் தேடாமல் மருத்துவமனை உட்பட இன்னும் பல தொழில்களை நடத்துபவர். இப்படிப்பட்ட சரவணன் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் சீட் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்த நிலையில் அவரது உறவினர் ஒருவரது வலியுறுத்தலால் பாஜகவில் இணைந்தார்.

உட்கட்சி குடைச்சல்
பாஜகவில் இணைந்த கையோடு மதுரை வடக்குத் தொகுதியில் சீட் வாங்கி எம்.எல்.ஏ.வுக்கு போட்டியிட்டார். ஆனால் இவரது பாஜக வரவை அக்கட்சியின் சீனியர் நிர்வாகியான பேராசிரியர் சீனிவாசன் விரும்பவில்லை. அவர் கொடுத்த குடைச்சல்களை சமாளித்து டாக்டர் சரவணனும் முடிந்த வரை மதுரையில் அரசியல் செய்து வந்தார். மேலும், மத்திய அரசின் வாரியங்களில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது துறைமுக பொறுப்புக் கழகத்திலோ முக்கிய பதவியை எதிர்பார்த்தார்.

பதவி எதிர்பார்ப்பு
அண்ணாமலைக்கும் டாக்டர் சரவணனுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் கேசவ விநாயகம் அதற்கு கேட்டை போட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து எவ்வளவு நாட்கள் தான் கட்சிக்கு லட்சம் லட்சமாக செலவு செய்வது என அதிருப்தியில் இருந்த சரவணனை அவரது ஆதரவாளர்கள் கடந்த ஜூன் மாதமே திமுகவில் இணையுமாறு வலியுறுத்தினர். இதனை ஒன் இந்தியா தமிழ் இடியாப்ப சிக்கலில் டாக்டர் சரவணன் என்ற தலைப்பில் செய்தியாக கூட வெளியிட்டிருந்தது.

ஒன் இந்தியா தமிழ்
நாம் அன்று என்ன சொன்னமோ அது தான் இன்று நடந்திருக்கிறது. ஆம், பாஜகவுக்கு தண்ணீர் காட்டிவிட்டு அக்கட்சியிலிருந்து விலகி தமிழக அரசியல் களத்தை தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளார் டாக்டர் சரவணன். பிற்பகலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மிக கடுமையாக திட்டி பேட்டி கொடுத்த சரவணனுக்கு அவரது மனசாட்சி உறுத்தியிருக்கிறது. இயல்பாகவே அவர் மென்மையான போக்கை கடைபிடிப்பவர் என்பதால் அமைச்சர் பிடிஆரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்பது என முடிவெடுத்தார்.

சுவிட்ச் ஆஃப் போன்
தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துவிட்டு இரவு 11 மணியளவில் அமைச்சர் பிடிஆர் இல்லம் தேடிச் சென்று நடந்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்தார். வீடு தேடி வந்த சரவணனை வாஞ்சையோடு அமர வைத்து பேசி அனுப்பினார் பிடிஆர். இதையடுத்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன், மத அரசியலும் வெறுப்பு அரசியலும் தனக்கு ஒத்து வராததால் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

சுயமரியாதை
மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக தனக்கு சுய மரியாதை தான் முக்கியம் என்பதால் பாஜகவில் இணையும் பேச்சுக்கே இடமில்லை என ஒரே போடாக போட்டார். திமுகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, இன்னும் அது பற்றி முடிவெடுக்கவில்லை என்றும் ஏன் இணைந்தால் கூட தவறில்லை எனவும் தனது ஆசையை வெளிப்படுத்தினார். தனது தாய் வீடு திமுக என டாக்டர் சரவணன் தெரிவித்தார்.

பாஜகவினர் அதிர்ச்சி
பல கட்சிகளுக்கு தண்ணீர் காட்டும் தங்களுக்கே டாக்டர் சரவணன் தண்ணீர் காட்டிவிட்டதை எண்ணி பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசியலில் எதுவும் எப்போதும் நிகழலாம் என்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் உதாரணமாக அமைந்துள்ளன.












Click it and Unblock the Notifications