இ - சானிடைஸர் பெட்டகத்தை வடிவமைத்த மதுரை பொறியாளர்... கதிர்வீச்சு மூலம் கிருமி அழிப்பு
மதுரை: மதுரையை சேர்ந்த பொறியாளர் சுந்தரேஸ்வரன் என்பவர், கதிர்வீச்சு மூலம் கிருமிகளை அழிக்கக்கூடிய இ- சானிடைஸர் பெட்டகத்தை வடிவமைத்தள்ளார்.
Recommended Video
இதில் மாமிசத்தை தவிர பேனா,பணம், காய்கறி, முகக்கவசம், கையுறை போன்றவற்றை வைத்து அதிலுள்ள கிருமிகளை அழிக்க முடியும் என கூறுகிறார் இவர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் நடத்திய ஆராய்ச்சியின் தொடர்ச்சியாக இந்த எலக்ட்ரானிக் சானிடைஸர் பெட்டகத்தை கண்டறிய முடிந்ததாக தெரிவிக்கிறார் சுந்தரேஸ்வரன்.

சானிடைஸர்
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் நிலையில் சுத்தத்தை பேணுவது பற்றியும், தூய்மையை பற்றியும் உலகளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கைகளை சோப்பு போட்டோ அல்லது சானிடைஸர்கள் மூலமாகவே கழுவ வேண்டும் என சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. சரி கைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள சோப்புகளும், லிக்யூட் சானிடைஸர்களும் உள்ளன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பணம், பேனா, காய்கறிகளில் ஒட்டியிருக்கும் கண்ணுக்கு தெரியாத கிருமிகளை எப்படி அழிக்க முடியும் என தோன்றுகிறதா. அதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் தான் இ-சானிடைஸரை வடிவமைத்துள்ளார் சுந்தரேஸ்வரன்.

மதுரையை சேர்ந்தவர்
மதுரையை சேர்ந்த சுந்தரேஸ்வரன் ஒரு மெக்கானில் இன்ஞ்னியரிங் பட்டதாரி. தற்போது மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் மதுரையிலேயே பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகள் வெளியானதை அடுத்து ஜனவரி மாதம் இ சானிடைஸர் பெட்டகத்தை வடிவமைப்பதற்கான பணிகளை தொடங்கினார். சுமார் 3 மாத காலம் நடத்திய ஆய்வு மற்றும் சோதனையின் அடிப்படையில் இப்போது தனது கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார்.

கதிர்வீச்சு
எலக்ட்ரானிக் சானிடைஸர் மூலம் மாமிசத்தை தவிர மற்ற அனைத்து பொருட்களிலும் உள்ள கிருமிகளை அழிக்க முடியும் என கூறுகிறார் சுந்தரேஸ்வரன். பணம் பலரது கைகளுக்கு சென்று வருவதால் அதன் மூலம் எளிதாக கைகளில் கிருமிகள் உட்புகுந்து மனித உடலுக்குள் செல்லக்கூடும். இதற்கு தீர்வு தரும் வகையில் சி ரே எனப்படும் கதிர்வீச்சின் மூலம் பணத்தில் உள்ள கிருமிகளை அழிக்க முடியும் என்றும், குறைந்த அளவிலான வெப்பம் மட்டுமே செலுத்தப்படுவதால் தாள்கள் எரியாது எனவும் தெரிவிக்கிறார் சுந்தரேஸ்வரன்.

பெரிய பெட்டகம்
மேலும், தற்போது சிறிய அளவிலான இ சானிடைஸர் பெட்டகத்தை மட்டுமே வடிவமைத்துள்ளதாகவும் எதிர்காலத்தில் துணிகளை உள்ளே வைத்து கதிர்வீச்சு மூலம் கிருமிகளை அழிக்கக்கூடிய வகையில் பெரிய வடிவில் இ சானிடைஸர் பெட்டகம் தயாரிக்க உள்ளதாகவும் கூறுகிறார் சுந்தரேஸ்வரன். மேலும், தற்போது முகக்கவசம் அத்தியாவசிய தேவைகளாகிவிட்டதால் அதனை தினமும் ஒன்று வாங்குவதற்கு பதில் இ சானிடைஸர் மூலம் தூய்மைப்படுத்திக்கொள்ளலாம் என உரக்கச் சொல்கிறார் அவர்.
இதனிடையே தனது கண்டுபிடிப்பு பற்றி சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், லாப நோக்கமற்ற முறையில் இதனை விற்பனைக்கு கொண்டு வர தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார் சுந்தரேஸ்வரன்.












Click it and Unblock the Notifications