ஆவின் பால் பாக்கெட்டை திறந்து பார்த்தால்.. என்னங்க இது? உள்ளே ஏதோ மிதக்குது? பொதுமக்கள் அதிர்ச்சி
மதுரை: மதுரையில் விநியோகிக்கப்பட்ட ஆவின் பாலில் 'ஈ' மிதக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் ஆவின் நிர்வாகம் வருத்தம் தெரிவித்து விளக்கமும் அளித்துள்ளது. இருந்தபோதிலும், ஆவின் பாலை தொடர்ச்சியாக வாங்கி வருபவர்கள் மத்தியில் இந்த சம்பவம் ஒருவித அச்சத்தையும், அருவெறுப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கோடிக்கணக்கான மக்கள் தினமும் வாங்கி உபயோகப்படுத்தும் ஆவின் பாலில் இதுபோன்ற தவறுகள் நடைபெறுவது தமிழக மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

ஆவின் பாலுக்கு முதலிடம்
அரசுத் துறை நிறுவனமான ஆவின் பால் தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு கோடிக்கணக்கான மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு அலகுகளும், நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. மேலும், ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை வழங்குவதற்கும் பிரத்யேக டிப்போக்களும் செயல்பட்டு வருகின்றன. எத்தனை தனியார் பால் நிறுவனங்கள் வந்தாலும் பெரும்பாலான மக்கள் ஆவின் பாலையே விரும்பி வாங்கி வருகின்றனர்.

குழந்தைகளுக்கு கொடுக்கும் பால்
அரசுத் துறை நிறுவனம் என்பதால் அதன் தரத்திலும், பாதுகாப்பிலும் எந்தவித குறைபாடும் இருக்காது என்பதே ஆவின் பாலை அதிக அளவிலான மக்கள் விரும்பி வாங்குவதற்கு காரணம் ஆகும்.
மேலும், வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு ஆவின் பால் கொடுப்பதையே தமிழகத்தில் உள்ள 99 சதவீத குடும்பங்கள் வழக்கமாக வைத்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் இல்லாத பட்சத்தில், அதற்கு மாற்றாக பெற்றோர் முதலில் தேர்வு செய்வது ஆவின் பாலை தான். அந்த அளவுக்கு ஆவின் பால் தமிழக மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற்று இருக்கிறது.

பால் பாக்கெட்டில் 'ஈ'
இந்நிலையில், மதுரையில் நடந்திருக்கும் ஒரு சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் இன்று காலை ஒரு பெண் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டை வாங்கி இருக்கிறார்.
பின்னர் வீட்டுக்கு வந்து அந்த பால் பாக்கெட்டை கத்திரிக்கும் சமயத்தில் அதில் ஏதோ கறுப்பாக ஒன்று மிதப்பதை அவர் பார்த்திருக்கிறார். பின்னர் நன்றாக அதை உற்றுப் பார்த்த போது அது 'ஈ' என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும், இதுதொடர்பாக ஆவின் நிறுவனத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 'ஈ' மிதந்த அந்த பால் பாக்கெட் திரும்பப் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு புதிய பால் பாக்கெட் வழங்கப்பட்டது.

ஆவின் விளக்கம்
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆவின் நிறுவனம் சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பேக்கிங் செய்யும் போது எதிர்பாராதவிதமாக இந்த தவறு நடந்துள்ளதாகவும், இனி எதிர்காலத்தில் இதுபோன்ற தவறு நடக்காது எனவும் ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே, இந்த பால் பாக்கெட்டை திரும்பப் பெற்று இதுகுறித்து விசாரணையும் நடைபெறுவதாக ஆவின் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரை ஆவினில் இருந்து மட்டும் தினந்தோறும் 5 லட்சம் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு 40 வழித்தடங்களில் அவை விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications