கிரானைட் அரசுடமையாக்கக் கோரிய வழக்கில் பிஆர் பழனிச்சாமி விடுதலை ரத்து - மதுரை ஹைகோர்ட் கிளை
மதுரை: கிரானைட் கற்களை அரசுடைமையாக்க கோரிய வழக்கில் பி.ஆர்.பழனிசாமி உள்பட 3 பேரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது. அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு குறித்து அப்போதைய ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரித்து அரசுக்கு அறிக்கை அளித்தார்.

இந்த நிலையில் தனியார் பட்டா நிலங்களில் வைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரியது தொடர்பான இரு வழக்குகளில் பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார் மற்றும் சகாதேவன் ஆகியோரை மேலூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி கடந்த 29.3.2016ல் விடுதலை செய்தார். மேலும் அவரது உத்தரவில், அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்திருந்தார்.
இந்நிலையில் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்ததை எதிர்த்தும் அப்போதைய மாவட்ட ஆட்சியர் அன்சூல் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்ட மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இரு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சில ஆண்டுகளாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த அப்பீல் வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி இன்று தீர்ப்பளித்தார். அதில் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தும், ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மேலூர் நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இந்த வழக்கில் அப்போதைய மாவட்ட ஆட்சியர், கனிம வளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 2 மாதத்தில் ஆஜராக வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை கனிம வளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 2 மாதத்தில் முடிக்க வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications