18 பேரிடமிருந்தும் செலவுக் கணக்கை வசூலிக்க வேண்டும்.. மதுரை ஹைகோர்ட்டில் அதிரடி வழக்கு
மதுரை: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களிடமிருந்து தேர்தல் செலவுக் கணக்கை வாங்காமல் அந்தத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தக் கூடாது என்று கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தினால் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கான ரூபாய் வீணாக செலவிடப்படும். எனவே 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது மேற்கண்ட 18 தொகுதிகளுக்கு செலவிடப்பட்ட தொகையை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரிடம் வசூலிக்க வேண்டும்.
அந்த தொகையை கஜா புயல் பாதித்த பகுதிகளில் செலவிட உத்தரவிட வேண்டும். அதுவரை 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
அந்த மனு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த தடையில்லை என்று தெரிவித்தது. அதேசமயம் தலைமை தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் தகுதிநீக்கப்பட்ட 18 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications