கிரேட் எஸ்கேப்.. தேர்தல் முடியும் வரை.. கதிர்காமுவை கைது செய்ய கூடாது.. ஹைகோர்ட் உத்தரவு
பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமுவுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை: ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பித்துள்ளது பெரியகுளம் அமமுக.. தேர்தல் முடியும்வரை கதிர்காமுவை கைது செய்யக்கூடாது என மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எத்தனையோ பிரச்சனைகளை தாண்டி அமமுக தேர்தலை சந்திக்க தயாராகி வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பெரியகுளம் அருகே சருத்திபட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி தேனி மகளிர் போலீசில் கதிர்காமு மீது பாலியல் புகார் அளித்தார்.
கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றபோது, டாக்டர் கதிர்காமு மயக்க ஊசி போட்டு தன்னை கற்பழித்துவிட்டதாக இளம் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

ஆபாச வீடியோ
இதற்கு அவரிடம் நியாயம் கேட்ட போது, மயக்கத்தில் இருந்த என்னை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும், தனது ஆசைக்கு இணங்காவிட்டால் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டி பலமுறை என்னை பலாத்காரம் செய்தார் என்றும் அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

அரசியல் சதி
இதையடுத்து, கதிர்காமு மீது 3 பிரிவுகளின் கீழ் தேனி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள். இதனால் எந்த நேரமும் கதிர்காமு கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. இது அரசியல் சதி என்று கதிர்காமு விளக்கம் அளித்தாலும், ஆதாரங்கள் வலுவாக இருப்பதாக சொல்லப்பட்டது.

பிரச்சாரம்
இதனிடையே அரசியல் காரணங்களுக்காக தம் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக கதிர்காமு மதுரை ஐகோர்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணையில் "மனுதாரர் முக்கியமான அரசியல் கட்சி வேட்பாளர் ஆவர். அவர் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். அந்த சமயத்தில் அவரை போலீசார் திடீரென கைது செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதனால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என்று கதிர்காமு தரப்பில் வாதாடப்பட்டது.

உத்தரவு
இன்று இது சம்பந்தமாக மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கதிர்காமுக்கு நீதிபதி முன்ஜாமீன் வழங்கியதுடன், தேர்தல் முடியும் வரை கதிர்காமுவை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டார்.

தப்பித்தது
தேர்தல் முடிந்த பின்பு மனுதாரருக்கு நோட்டீசு அனுப்பி விசாரணைக்கு அழைக்கலாம் என்றும், சம்பந்தப்பட்ட போலீசாரின் விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனையும் அப்போது விதித்தார். இந்த முன்ஜாமீன் வழங்கியுள்ளதன் மூலம் பெரியகுளம் அமமுக தரப்பு பெரும் சிக்கலிலிருந்து தப்பித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்!












Click it and Unblock the Notifications