திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோத டிக்கெட் விற்பனை: குற்றவியல் நடவடிக்கை பாயும் - நீதிமன்றம் உத்தரவு
மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்ய சட்டவிரோதமாக டிக்கெட் விற்பனை செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாக தரிசன டிக்கெட் விற்பனையைத் தடுக்க அறநிலையத்துறையும் காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றானது திருச்செந்தூர் முருகன் கோயில். இக்கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு கோயிலில் சட்ட விரோதமாக டிக்கெட் விற்பனை நடைபெறுவதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், பக்தர்கள் கோயிலுக்கு மன நிம்மதியைத் தேடித்தான் வருகிறார்கள். அங்கும் சட்டவிரோத செயல்களை அனுமதிக்க முடியாது. திருச்செந்தூர் சுவாமி கோயிலில் சட்ட விரோத தரிசன டிக்கெட் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும்.
முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம், சட்டவிரோதமாக தரிசன டிக்கெட் விற்பனையைத் தடுக்க அறநிலையத் துறையும், காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும். சட்டவிரோதமாக டிக்கெட் விற்பனை செய்யும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications