நீர்நிலையை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு புதிய சிக்கல்... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மதுரை: நீர்நிலையை ஆக்கிரமித்தது தவறு என்று வழக்கு தொடர்ந்தவரின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, நீர்நிலைகளில் அரசு, தனியார் என எந்த கட்டிடங்களும் கட்டக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை இடிப்பது குறித்து நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு எதிரான வழக்கில் தான் இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டினால் என்றைக்குமே சிக்கல் தான்.. எந்த காலத்திலும் அரசு பட்டா வழங்காது.. கடந்த 25 வருடங்களில் நீர் நிலை என்று தெரியாமல் இடம் வாங்கியவர்கள் மற்றும் அதில் வீடு கட்டியவர்கள் இன்று வரை அவதிப்பட்டு வருகிறார்கள். நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் பத்திரப்பதிவு செய்து வந்த நிலையில், அரசு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை..

அதேபோல் கடந்த சில வருடங்களாக நீர்நிலைகளை நிலங்களின் மதிப்பு பூஜியமாக்கப்பட்டுள்ளதால், அவரால் பத்திரப்பதிவும் செய்ய முடிவது இல்லை.. மக்கள் வாழ்வாதாரம் கருதி அரசு பல இடங்களில் இன்னமும் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவில்லை. அதேநேரம் நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களை வெளியேறி செல்ல வேண்டும் எனறு நோட்டீஸ் அனுப்பி வருகிறது. மோசமான நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றியும் வருகிறது.
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பழனியாண்டி என்பவருடைய வீட்டை இடிக்க மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனை எதிர்த்து பழனியாண்டி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், " என் பெயர் பழனியாண்டி, நீர்நிலையை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக கூறி, எனக்கு புதுக்கோட்டை மாவட்ட அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனை ரத்து செய்வதுடன், மாற்று இடம் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, சம்பந்தப்பட்ட நீர்நிலையில் அரசு கட்டிடங்களும் உள்ளன என தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில். மனுதாரர் நீர்நிலையை ஆக்கிரமித்தது தவறு. எனவே அவரது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. நீர்நிலைகளில் அரசு, தனியார் என எந்த கட்டிடங்களும் கட்டக்கூடாது. அவற்றை அகற்ற வேண்டும்.
மனுதாரர் வீட்டை அகற்ற 4 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் அவர், மாற்று இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம். மனுதாரர் மாற்று இடம் கோரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு மனு அளிக்கலாம். அதனை கலெக்டர் பரிசீலித்து தகுதி இருக்கும்பட்சத்தில் 8 வாரத்தில் மாற்று இடம் வழங்கலாம். மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications