நியோமேக்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.1,671 கோடி சொத்துகள்.. முதலீட்டாளர்களுக்கு ஐகோர்ட் குட்நியூஸ்
மதுரை: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நியோமேக்ஸ் நிதி நிறுவன முதலீட்டாளர் சங்கத்தின் செயலாளர் சங்கரநாராயணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின்படி, நியோமேக்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.1,671 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நியோமேக்ஸ் நிதி நிறுவன முதலீட்டாளர் சங்கத்தின் செயலாளர் சங்கரநாராயணன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், மதுரையை தலைமை இடமாக கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டது. அதன் துணை நிறுவனங்கள் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வந்தன. இந்த நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட முதலீட்டு தொகையை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளன.

இந்த மிகப்பெரிய மோசடி சம்பவம் குறித்து மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் பொதுமக்கள் பலர் புகார் அளித்திருந்தனர். அதன் பேரில் நியோமேக்ஸ், அதன் துணை நிறுவனங்களின் இயக்குனர்கள், ஏஜெண்டுகள் என பலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான ஏராளமான சொத்துகளை முடக்கி வைத்துள்ளனர்.
இதற்கிடையே நாங்கள் விசாரித்த போது, மேற்கண்ட நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் திருச்சி, குற்றாலம், கயத்தாறு, கோவில்பட்டி, ராமேசுவரம், நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் பினாமி பெயரில் இருப்பதாகவும் அவற்றின் மதிப்பு ரூ.1,671 கோடி என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சொத்துகளையும் முடக்கி முதலீட்டாளர்களுக்கு உரிய தொகையைப் பெற்றுத்தர வேண்டும் என சம்பந்தப்பட்ட போலீசாரிடம் மனு அளித்திருக்கிறோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் மனுவின் அடிப்படையில் மேற்கண்ட சொத்துகளை முடக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தனபால் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் பாபு ராஜேந்திரன் ஆஜராகி வாதிடுகையில், நியோமேக்ஸ் மற்றும் துணை நிறுவனங்களில், மொத்தம் 17 நிறுவனங்கள் போலி ஆவணங்கள் மூலம் செயல்பட்டிருக்கிறது. மொத்தம் 110 கம்பெனிகள் பதிவு பெற்று இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த நிறுவனங்கள் சார்ந்த நிலங்களை முடக்க போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனறு வாதிட்டார். விசாரணை முடிவில், மனுதாரரின் மனு குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் ஒரு மாதத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி தனபால் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications