திருவிழாக் கோலம் பூண்ட மதுரை! திரும்பிய திசையெல்லாம் அதிமுகவினர்! கரைபுரளும் உற்சாகம்!
மதுரை: மதுரையில் நாளை அதிமுக மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இன்றே லட்சக்கணக்கில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் மதுரை மாநகரும், புறநகரும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
திரும்பிய திசையெங்கும் அதிமுக கட்சிக் கொடி கட்டிய வாகனங்களும், கரைவேட்டிகளும் பளிச்சிடுகின்றன. சென்னையிலிருந்து மட்டும் 40,000 பேர் மதுரைக்கு வந்திருப்பதால் மாநாடு இன்றே தொடங்கிவிட்டதை போன்று கூட்டம் ஜெ.ஜெ.வென அலைமோதுகிறது. அதேபோல் அதிமுக முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் மதுரையில் முகாமிட்டுள்ளனர்.

அதிமுக தொண்டர்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் விதமாக மாநாட்டுத் திடலில் எம்.ஜி.ஆர். பாட்டு ஒலிக்கவிடப்படுகிறது. கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரையிலான தொண்டர்களை ஒருங்கிணைத்து தனது பலம் என்னவென்பதை காட்டவுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இன்றும் நாளையும் சேர்த்து சுமார் 10 லட்சம் பேருக்கு குறையாமல் கூட்டம் திரளும் என்பதால் மாநாடு நடைபெறும் மதுரை விமான நிலையம் பகுதியில் காவல்துறை தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் அதிமுக மருத்துவ அணி சார்பில் மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றன.
அதுமட்டுமல்ல தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பிரத்யேக ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்படுள்ளது. அதிமுக மாநாடு செலவை பொறுத்தவரை எப்படிப் பார்த்தாலும் ரூ.100 கோடிக்கு குறையாது என்பதால் இவ்வளவு தொகை செலவழித்து ஒரு நாள் மாநாடாக நடத்தியதற்கு பதில் 2 நாள் மாநாடாக நடத்தியிருக்கலாம் என்பது அக்கட்சி தொண்டர்களின் எண்ணமாக உள்ளது.












Click it and Unblock the Notifications