வெங்காரத்தை சாப்பிட்டு கதிகலங்க வைத்த மதுரை கலையரசி.. ஆயுள் மருந்து கட்டுப்பாட்டு துறை சொல்வதென்ன
மதுரை: மதுரையில் கலையரசிக்கு ஏற்பட்ட முடிவு, இனி யாருக்குமே ஏற்பட்டுவிடக்கூடாது என்று கண்ணீர் மல்க சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள்.. உடல் எடையை குறைக்க முயற்சித்து, கலையரசி வெங்காரத்தை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்தும் மதுரை மக்கள் மீளவில்லை.. இந்நிலையில், ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் முக்கிய அட்வைஸ் ஒன்றை தந்துள்ளது.
மதுரை மாவட்டம் செல்லூர் அருகே மீனாம்பாள்புரம் வாலிபன் வேல்முருகனின் மகள் கலையரசி (19), மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

சிறுவயதிலிருந்தே உடல் பருமனாக இருந்த கலையரசி, எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யூடியூப் வீடியோக்கள் மூலம் "உடல் எடை குறைப்பது எப்படி?" என்று தேடி வந்தார்..
ஒரு வீடியோவில் "வெங்காரம் சாப்பிடுவதால் எடை குறையலாம்" என்று சொன்னதை பார்த்து, அருகிலுள்ள நாட்டு மருந்துக் கடையில் வெங்கார கல்லை வாங்கி சாப்பிட்டுள்ளார்.. சாப்பிட்ட பிறகு சிறிது நேரத்திலேயே வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் காணப்பட்டதால், பெற்றோர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சை முடிந்த பிறகு வீட்டுக்கும் அழைத்து வந்தனர்..
கலையரசிக்கு வந்த முடிவு
ஆனால் இரவு நேரத்தில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்த போதிலும் கலையரசி உயிரிழந்தார்., செல்லூர் போலீசார் சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்போது, நாட்டு மருந்துக் கடை மற்றும் யூடியூப் சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் சமூகத்தில் எழுந்து வருகிறது..
எனினும் கலையரசியின் மரணம், மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் வரும், பாரம்பரிய மருத்துவ முறை கருத்துகளை நம்ப வேண்டாம் என்று ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது. முகவரி இல்லாத விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்றும் ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரி சொல்லும்போது, "ஆயுஷ் மருந்துகள் சார்ந்த விளம்பரமோ, தனி நபர் டாக்டர் சார்ந்த விளம்பரமோ செய்வது, பெரும்பாலும் குறைக்கப் பட்டுள்ளது. ஆனால், சமூக வலைதளங்களில் அவற்றை கட்டுப்படுத்துவது சவாலானதாக உள்ளது.
போலி முகவரி போன் நம்பர் - விளம்பரம்
பல விளம்பரங்களில், மொபைல் எண் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அந்த எண்ணை அழைத்து முகவரி கேட்டாலும், அவர்கள் கொடுப்பதில்லை. இதனால், அது போன்று விளம்பரம் செய்வோரை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.
அதேநேரம், அந்த விளம்பரங்களை கட்டுப்படுத்த, மத்திய அரசுக்கு கடிதம் வாயிலாக அறிவுறுத்தப்படும். பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வரும், ஆயுஷ் மருத்துவம் சார்ந்த, டிப்ஸ் போன்றவற்றை கேட்டு, அப்படியே செயல்படுத்த வேண்டாம். ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவர்களிடம் ஆலோசித்து மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்..
பலமுறை எச்சரித்தும் சிக்கல்
சமூக வலைதளங்களில், சித்தா, ஹோமியோபதி மற்றும் ஆயுஷ் மருத்துவ முறைகளில் அடிப்படையாய் இருக்கும் மருந்துகள் விற்பனை மற்றும் பரிந்துரைகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஆயுஷ் அமைச்சகம் இதற்காக விளம்பரங்களுக்கு முன்பே தடை விதித்திருந்தபோதும், ஆண்மை குறைபாடு, உடல் எடைக் குறைப்பு போன்ற பிரச்சனைகள் தொடர்பான விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவுகின்றன.
இந்த நிலை, பொதுமக்கள், குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு தவறான தகவல் மற்றும் தவறான சிகிச்சை வழிகாட்டலாக மாறக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications