பாக்கி வைத்த அறநிலையத்துறை.. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ரூ.59 லட்சம் வாடகை கட்டலை? நம்ப முடியல
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு, தமிழக அறநிலையத்துறை வாடகை பாக்கி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த தகவலானது, பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
மதுரை எல்லீஸ்நகரில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது... இங்கு அதிமுக ஆட்சியின்போது, இந்து சமய அறநிலையத்துறை மண்டல அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது... இதற்கு முன்பு இந்த அலுவலகம் தெற்கு - மேற்கு சித்திரை வீதி சந்திப்பில், மீனாட்சி அம்மனுக்கு சொந்தமான இடத்திலேயே இயங்கி வந்தது.

புதிய அலுவலகம்: ஆனால், அங்கு இடவசதி இல்லாத காரணத்தினால், கடந்த 2017-ல் அங்கிருந்து காலி செய்து, எல்லீஸ் நகரில் புதிய மண்டல அலுவலகம் கட்டப்பட்டது.. ஆனால் காலி செய்யும்போது வாடகை பாக்கி ரூ.59 ஆயிரத்தை தரவில்லையாம். அறநிலையத்துறையின் கீழ்தான் மீனாட்சி கோயில் நிர்வாகம் இயங்குவதால் அதிகாரிகளும் இதனை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர்..
இப்படிப்பட்ட சூழலில் தினகரன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கோயில் நிர்வாகத்திடம் இதுகுறித்து கேட்டார்.. இதற்கு பதில் அளித்துள்ள நிர்வாகம், வாடகை பாக்கியாக ரூ.59 லட்சத்து 6 ஆயிரத்து 813 அறநிலையத்துறை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
பக்தர்கள் அதிர்ச்சி: இந்த தகவல் பக்தர்கள் தரப்பில் அதிர்ச்சியை தந்து வருகிறதாம்.. கோயில் இடத்தில் கடை வைத்திருந்தாலோ, குடியிருந்தாலோ அவர்களிடம் மட்டும் வாடகை விஷயத்தில் கறார் காட்டும் அறநிலையத்துறை அதிகாரிகள், தங்களது அலுவலகத்திற்கான வாடகையை தராமல் இழுத்தடிப்பது சரியா? இதனால் மீனாட்சி கோயிலுக்கும் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதே இடத்தை தனியாருக்கு தந்திருந்தால், வாடகையாக ஒழுங்காக வந்திருக்கும்" என்று புலம்புகிறார்களாம்.
ஆர்டிஐ சட்டத்தின் கீழ், வாடகை பாக்கி ரூ.59 லட்சம் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளதும், வாடகை பாக்கியை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறையே செலுத்தவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதும் பரபரப்பை கூட்டி வருகிறது.
திருச்செந்தூர்: கடந்த மார்ச் மாதம் திருச்செந்தூர் கோயில் விவகாரத்திலும் இப்படியொரு புகார் கிளம்பியது.. திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர், மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "முறையாக வாடகை செலுத்தத் தவறிய நெல்லை மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. கோயிலுக்கு சேர வேண்டிய ரூ.54.35 லட்சம் வாடகை பாக்கியை உடனே செலுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இதற்கு அறநிலையத்துறை தரப்பில் பதிலளிக்கும்போது, "கோயிலுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த 3 மாத கால அவகாசம் வேண்டும்" என்று கோரப்பட்டது.
இறுதியில், வழக்கை விசாரித்த நீதிபதி, "எப்போது வாடகை பாக்கியை செலுத்துவீர்கள்? என்ற விவரத்தை 1 வாரத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் விரிவான பதில் அளிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது நினைவிருக்கலாம்..!!












Click it and Unblock the Notifications