கோலாகலமாக நடந்த மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்.. புது மாங்கல்யம் மாற்றி கொண்ட பெண்கள்!
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதனை காண மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் பிரியாவிடையுடன் பல்வேற்யு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து மீனாட்சி அம்மன் மதுரை மாநகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வகையில் பட்டாபிஷேகம் நடைபெற்றது.

நேற்று மீனாட்சி அம்மன் சிவபெருமானை போருக்கு அழைக்கும் நிகழ்வான திக்கு விஜயம் நடைபெற்றது. இந்த நிலையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. காலை 8.57 மணிக்கு இந்த திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
தங்கை மீனாட்சியை பவளக்கனிவாய் பெருமாள் தாரை வார்த்து கொடுத்தார். மீனாட்சி திருக்கல்யாணத்தை காண தெய்வானையுடன் முருகப்பெருமானும், திருப்பரங்குன்றத்தில் இருந்து நேற்றிரவே மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். இதனையொட்டி கோயிலின் வடக்கு - மேற்கு ஆடி வீதிகளில் உள்ள சந்திப்புகளில் ரூ.30 லட்சம் செலவில் 10 டன் எடையுள்ள பூக்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வண்ணப் பட்டுத்துணிகளால் மேடைக்கு மேலும் அழகூட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக மேற்கு ஆடி வீதியில் 700 அடி நீளத்திற்கும், வடக்கு ஆடி வீதியில் 700 அடி நீளத்திற்கும் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண மதுரை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கோயில் பகுதியில் குவிந்துள்ளனர். திருக்கல்யாணத்திற்காக ரூ.500, ரூ.200 கட்டணத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால் ஒட்டுமொத்த மதுரையும் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
இதனையொட்டி காவல் ஆணையர் அபிஷேக் தீக்ஷித் தலைமையில் 10 எஸ்பிக்கள் உட்பட 2,500க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தையொட்டி பெண்கள் பலரும் தாலி கயிறை புதுப்பித்து கொள்வது வழக்கம். அதேபோல் 1.5 லட்சம் பேருக்கு தடபுடலாக விருந்து தயாராக இருக்கிறது.












Click it and Unblock the Notifications