"திருந்த மாட்டார்.." ஓபிஎஸ் நடத்துவது பொதுக்குழு வெறும் பொருட்காட்சி தான்!" டென்ஷனான ராஜன் செல்லப்பா
மதுரை: அதிமுக உட்கட்சி பூசல் தொடரும் நிலையில், அக்கட்சியின் .ராஜன் செல்லப்பா, ஓபிஎஸ் குறித்தும் அவர் நடத்த உள்ள பொதுக்கூட்டம் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.
அதிமுகவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட உட்கட்சி பூசல் இன்னுமே கூட தொடர்கிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகளாகவே அதிமுக இயங்கி வருகிறது.
இரு தரப்பினரும் இணைய வாய்ப்பே இல்லை என்றே அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். மேலும், இரு தரப்பினரும், எதிர் தரப்பினரை விமர்சித்துப் பேசுவதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
தேவருக்கு எப்போதும் மரியாதை கொடுப்பது அதிமுக தான்! எம்ஜிஆரை போல எடப்பாடி... ராஜன் செல்லப்பா பளீச்
ராஜன் செல்லப்பா
இதற்கிடையே ஓபிஎஸ் தரப்பில் இருந்து போட்டிக்குப் பொதுக்குழு நடக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓபிஎஸ் தரப்பை மிகக் கடுமையாகச் சாடி பேசினார். மேலும், ஓபிஎஸால் அதிமுகவுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படப்போவது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக ஆட்சி
மதுரை ஒத்தக்கடையில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை அதிமுக எம்எல்ஏ வி.வி.ராஜன் செல்லப்பா பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, "அடுத்து வரும் மக்களவை தேர்தலுக்கான பிரசார பணிகளை அதிமுக தொடங்கிவிட்டது. திமுக ஆட்சியில் மக்களுக்கு ஏகப்பட்ட துன்பங்கள் ஏற்பட்டு உள்ளன. அதைப் பட்டியலிட்டு அதிமுகவினர் பிரச்சாரம் செய்கிறோம். அடுத்து வரும் மக்களவை தேர்தலில் அதிமுக நிச்சயம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்..
100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆபத்து
திமுக ஆட்சியில் மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.. அதிமுக கொண்டு வந்த 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை திமுக முடக்க நினைக்கிறது.. திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் நடக்கும் கொலை உள்ளிட்ட கொடூர குற்றங்களே இதற்குச் சாட்சி. இதையெல்லாம் தடுக்காமல் திமுக அரசு தவறிவிட்டது.
ஓபிஎஸ்
ஓபிஎஸ் எந்த கட்சிக்கு பொதுக் குழுக் கூட்டப் போகிறார் என முதலில் விளக்க வேண்டும்.. ஓபிஎஸ் தற்போது தனிக் கட்சியாகத் தான் செயல்பட்டு வருகிறார்.. அவருடைய கட்சிக்கு பொதுக் குழு கூட்டினால் அதிமுகவுக்கு எந்தவொரு பிரச்சினையும் ஏற்படப்போவது இல்லை... ஓபிஎஸ் கூட்டுவது அதிமுக பொதுக் குழு அல்ல, அது ஓபிஎஸ் கட்சியின் பொதுக் குழு தான். ஓபிஎஸ் கூட்ட உள்ளதாகச் சொல்லப்படும் இந்த பொதுக் குழுவால் அதிமுகவுக்கு ஆபத்து வரப் போவதில்லை, யாருக்கும் எந்தவொரு பாதிப்புமில்லை..
கவலை இல்லை
அதைப் பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை.. 2532 பேர் கையெழுத்திட்டு எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொண்டனர். பொதுக் குழு உறுப்பினர்களில் எத்தனை பேரை அவரால் அழைத்துச் செல்ல முடியும்.. ஓபிஎஸ் கூட்டும் பொதுக்குழு வேடிக்கையானது, வினோதமானது, பொருட்காட்சியைப் போன்றது. அவ்வளவு தான்.. ஓபிஎஸை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்புகளே இல்லை.. ஏற்கனவே எத்தனையோ வாய்ப்பு கொடுத்தும் அவர் திருந்துவதாக இல்லை.. உண்மையான அதிமுகவை முடக்கச் சதி செய்து வருகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.