மணமணத்த மதுரை! முனியாண்டி கோயிலில் பிரியாணி திருவிழா! 200 ஆடு, 300 கோழி, 3000 கிலோ அரிசியில் மாஸ்
மதுரை: மதுரை முனியாண்டி சாமி கோயிலில் பிரியாணித் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டியில் முனியாண்டி சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் இரு சமூகத்தினர் தனித்தனியே பிரியாணி திருவிழாவை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு தரப்பினர் திருவிழா நடத்திய நிலையில் தற்போது மற்றொரு சமூகத்தினர் நேற்றைய தினம் பிரியாணி திருவிழாவை நடத்தினர்.
தமிழகத்தில் இருக்கும் முனியாண்டி விலாஸ்களின் உரிமையாளர்களும் ஊர் மக்களும் இணைந்து இந்த திருவிழாவை நடத்தி வருகிறார்கள். பொதுவாக கோயில்களில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை, எள்ளு சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் உள்ளிட்டவைதான் பிரசாதங்களாக வழங்கப்படும்.
ஆனால் இந்த முனியாண்டி கோயிலில் சுடச் சுட பிரியாணி பிரசாதமாக வழங்கப்படும். 89 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த திருவிழாவின் போது குறிப்பிட்ட சமூகத்தினர் வெள்ளிக்கிழமை காலை விரதம் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அதை சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். பிறகு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
கோயிலில் நிலை மாலையுடன் இளைஞர்கள் ஆட்டம் , பாட்டத்துடன் ஊர்வலமாக செல்ல பெண்கள் தங்களது வீடுகளில் இருந்து எடுத்து வந்திருந்த தேங்காய், பூ, பழத் தட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர். பிறகு கோயிலுக்கு தாங்கள் கொண்டு சென்ற பூஜை பொருட்களை நெய்வேத்திய்ம செய்தனர்.
இந்த விழாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்தனர். பின்னர் ஆடு, கோழிகளை படையலிட்டனர். படையலிடப்பட்ட 200 ஆடுகளையும் 300 கோழிகளையும் வைத்து பிரியாணி தயாரித்தனர். இதற்காக 3000 கிலோ சீரக சம்பா அரிசியில் 20 க்கும் மேற்பட்ட அண்டாக்களில் பிரியாணி சுடச்சுட தயார் செய்யப்பட்டு முனியாண்டிக்கு படைக்கப்பட்டது.
இதையடுத்து பக்தர்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் பிரியாணியை பிரசாதமாக வாங்கிக் கொண்டு சென்றனர். சிலர் தாங்கள் தோளில் அணிந்திருத துண்டுகளில் கூட பிரியாணியை வாங்கிச் சென்றனர். இதில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் இரவு முழுவதும் தங்கி முனியாண்டி சுவாமியை வழிபாடு செய்தனர்.












Click it and Unblock the Notifications