5 பைசாவுக்கு பிரியாணி.. மதுரை ஹோட்டலின் கவர்ச்சிகர விளம்பரம்.. முண்டியடித்த மக்கள்.. விரட்டிய போலீஸ்
மதுரை: மதுரையில் 5 பைசாவுக்கு பிரியாணி என்ற அறிவிப்பால் அந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் முண்டியடித்து கொண்டு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனாவின் இரண்டாவது அலையால் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று அதிகரித்து தற்போதுதான் படிப்படியாக குறைந்து வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அடுத்ததாக 3 ஆவது அலையை எதிர்கொள்ளவும் அரசு தயாராக இருந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. மேலும் பொதுமக்களுக்கு தேவையான அறிவுரைகளையும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகிறது.

செல்லூர் பகுதி
இந்த நிலையில் மதுரை செல்லூர் பகுதியில் அக்ஷயா என்பவர் அசைவ உணவகம் ஒன்றை இன்று திறந்தார்கள். உணவகத்திற்கு விளம்பரம் தேடும் நோக்கோடு இன்று முதல் நாள் பிரியாணி வாங்க வரும் முதல் 100 நபர்களுக்கு 5 பைசா கொடுத்தால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தனர்.

போஸ்டர்
இந்த அறிவிப்புகளுடன் மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டினர். செய்தித்தாள்களிலும் விளம்பரங்களை கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து 5 பைசாவுக்கு பிரியாணியை வாங்குவதற்காக இன்று காலை முதல் நீண்ட வரிசையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர்.

சமூக விலகல்
பெரும்பாலானோர் முகக் கவசம் அணியவில்லை. இந்த கூட்டத்தினர் சமூக விலகலையும் பின்பற்றவில்லை. அனைவர் கையிலும் பழைய ஐந்து பைசா நாணயம் வைத்திருந்தனர். பிரியாணி தீர்ந்து விட்டது என கடை உரிமையாளர்கள் மக்களிடம் சொல்லிய போதும் அவர்கள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

சம்பவ இடம்
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து கூட்டத்தினரை கலைத்தனர். மேலும் கொரோனா பரவல் நேரத்தில் இது போல் கூட்டம் கூடுவது அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எதிரானது என்று கூட்டத்தினரையும் கடைக்காரர்களையும் போலீஸார் எச்சரித்தனர்.












Click it and Unblock the Notifications