எளிமையாக நடந்த அறிஞர் அண்ணா கொள்ளுப்பேத்தி திருமணம்! திமுகவிலிருந்து ஒருவரும் போகவில்லை
மதுரை: மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் கொள்ளுப்பேத்தி பிரித்திகா ராணிக்கும் ( ஐஎப்எஸ் அதிகாரி) ராஜஸ்தான் மாநிலத்தில் துணை ஆட்சியராக பணிபுரிந்து வரும் மதுரையைச் சேர்ந்த சித்தார்த் பழனிசாமி ஐ.ஏ.எஸ்-சுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. எந்த அரசியல் கட்சியினரும் இன்றி உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இயக்கங்கள் ஆட்சிக்கு வர காரணமாக இருந்தவர் அறிஞர் அண்ணாதுரை.. இவர் கடந்த 1967ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி முதல் 1969ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார். காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றி திமுகவை ஆட்சியில் அமர செய்தார். 1967 தொடங்கி திமுக மற்றும் அதிமுக என அவரது வழியில் கடந்த இரண்டு கட்சிகள் தான் தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்டு வருகின்றன.

காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இங்கு ஆட்சியை பிடிக்க முடியாமல் தவிப்பதற்கு அண்ணா தான் காரணம் என்று இன்று வரை திமுகவும், அதிமுகவும் கூறி வருகின்றன. அறிஞர் அண்ணாவிற்கு குழந்தைகள் இல்லை. எனவே, தன்னுடன் பிறந்த சகோதரியின் மகனான பரிமளத்தை தனது வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்தார். இதன்பின்னர் அண்ணாவின் வாரிசான பரிமளம் அண்ணாவுக்கு சரோஜா அண்ணா என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டர்.பரிமளம்அண்ணா - சரோஜா பரிமளா தம்பதியினருக்கு சாருதிகா ராணி என்ற மகள் பிறந்தார். அவருடைய பேத்தி தான் பிரித்திகா ராணி இந்திய தூதரகத்தில் (IFS) அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சுருத்திகா ராணியின் மகளான பிரித்திகா ராணி 2020-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார். தேசிய அளவில் 171-வது இடம்பிடித்து ஐஎப்எஸ் அதிகாரியானார். தற்போது பிரித்திகா ராணி ஸ்பெயினில் இந்திய தூதரக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் ஐஎப்எஸ் அதிகாரியான பிரித்திகா ராணிக்கும் , பி.சரவணபூபதி - சி.ரோசலின் தம்பதியரின் மகனும் ராஜஸ்தான் மாநிலத்தில் துணை ஆட்சியர் (IAS) அதிகாரியாக இருப்பவருமான மதுரைச் சேர்ந்த சித்தார்த் பழனிசாமிக்கும் நேற்று மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா பேலஸ் என்ற தனியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது.
இருவீட்டார் முன்னிலையில் தமிழ் முறைப்படி இணையேற்பு விழா இனிதே நடந்து முடிந்தது. இந்த விழாவில் இரு வீட்டாரின் உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றார்களள். இந்த திருமண விழாவில் எந்தவித முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கவில்லை. அண்ணாவின் கொள்ளுப்பேத்தி திருமணம் எந்தவித ஆடம்பரமும் இன்றி எளிய முறையில் நடந்தை கேட்டு மதுரைச் சேர்ந்த பலர் ஆச்சரியடைந்தனர்.
இதனிடையே பேரறிஞர் அண்ணாவின் இல்லத் திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. எவ்வித ஆர்ப்பாட்டமோ, தடபுடலோ இல்லாமல் மிக எளிமையாக திருமணம் நடந்ததை பலரும் பாராட்டி வருகிறார்கள். அதேநேரம் இந்த திருமணத்துக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுக மற்றும் திராவிட இயக்கத் தலைவர்கள் எல்லோரும் வருவார்கள் என அண்ணா குடும்பத்தினர் எதிர்பார்த்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், வைகோ இல்லத் திருமண விழாவுக்குப் போய்விட்டதால், யாருமே வரவில்லை. அண்ணாவின் இல்லத் திருமணத்தை திமுக புறக்கணித்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications