ஜாக்கியை வைத்து 25 அடி தூரத்திற்கு நகர்த்தப்பட்ட 100 வருட கோவில்
Recommended Video
மதுரை: மதுரையில் மேம்பாலம் கட்டும் பணிக்கு இடையூறாக இருந்து வந்த 100 வருட பழமையான கோவிலை ஜாக்கி தொழில்நுட்பத்தை வைத்து 25 அடிக்கு நகர்த்தியுள்ளனர்.
மதுரை நத்தம் சாலையில் பேங்க் காலனி பகுதியில் சாலை ஒரத்தில் 100 ஆண்டுகள் பழமையான மந்தையம்மன் கோவில் உள்ளது. இவ்வழியே 7 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் கட்டுவதால் சாலை ஒரத்தில் இருந்து 16 அடி நிலத்தை அரசு கையகப்படுத்தியது.
கோவிலை இடித்து விட்டு கட்டுவது என்றால் தற்போது நிலவரப்படி 1 கோடி ரூபாய் வரை செலவாகும். இதையடுத்து நவீன ஜாக்கி தொழில்நுட்பம் மூலம் கோவிலை நகர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவிலின் பழமை மாறாமல் ஜாக்கி தொழில்நுட்ப உதவியுடன் கோவில் நகர்த்தப்பட்டு வருகிறது.
இதற்காக கடந்த 2 மாதங்களாக ஜாக்கி உதவியுடன் கோவிலை மேலே உயர்த்தும் பணிகள் நடைபெற்றது. இன்று முதல் உயர்த்தப்பட்ட கோவிலை 25 அடி நகர்த்தும் பணிகள் நடைபெறுகிறது. இப்பணிகள் 3 நாட்கள் நடைபெறும்.
இப்பணிகளுக்காக 25 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. 2 மாதங்களாக 30 தொழிலாளர்கள் இப்பணியை செய்து வருகின்றனர். 4825 சதுர அடி பரப்பளவும், 350 டன் எடை கொண்ட கோவிலை பழமை மாறாமல் 350 ஜாக்கிகளின் உதவியுடன் நகரத்துவதால் கோவிலின் பழமை காக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.