பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, ஜிஎஸ்டிக்கு எப்போது சாட்டையடி? மதுரையை வலம்வந்த அண்ணாமலை போஸ்டர்
மதுரை: பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, ஜிஎஸ்டிக்கு எப்போது சாட்டையடி என மதுரை, தென்காசியை கலக்கும் போஸ்டர்களால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவினர் ஒட்டியுள்ள இந்த போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஞானசேகரன் (37) என்ற நபரை கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டங்கள்: இந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருந்தனர்.
அந்தவகையில், தமிழக பாஜக தலைவரும் கண்டனம் தெரிவித்து, சாட்டையால் தன்னை தானே அடித்து கொள்ளும் நூதன போராட்டத்தை நடத்தியிருந்தார். பச்சை வேட்டி அணிந்து, சட்டை இல்லாமல், தேங்காய் நாறால் செய்யப்பட்ட சாட்டையால், கோவையில் உள்ள தன்னுடைய இல்லத்தின் முன்பு, 8 முறை தன்னை தானே அடித்து கொண்டார்.
வினோத போராட்டம்: அண்ணாமலையின் இந்த நூதன போராட்டம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள், அண்ணாமலையின் வினோத போராட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்து, கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக சார்பில் ஒரு பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. அதில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர், ஜி.எஸ்..டி. வரி உயர்வுக்கு எப்போது சாட்டையால் அடித்துக்கொள்ளப் போகிறார்? என்ற கேள்விகளுடன் அச்சட்டு ஒட்டியிருக்கிறார்கள்.. அத்துடன், அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்வது போன்ற போட்டோவையும் போஸ்டரில் இடம்பெற செய்துள்ளனர்.
பெட்ரோல், டீசல்: இந்த போஸ்டர்கள் உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளான மதுரை ரோடு, தேனி ரோடு, பஸ் ஸ்டாண்டு வத்தலக்குண்டு ரோடு, பேரையூர் ரோடு என பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் இந்த போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள். இது மதுரை பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தென்காசியிலும் இதுபோல போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளன. மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு, ஜிஎஸ்டி ஆகியவற்றை குறிப்பிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படத்துடன் கூடிய போஸ்டர்கள் தென்காசி மாவட்டத்தை கலக்கி வருகின்றன.
தென்காசி: கடையம் வடக்கு ஒன்றிய சுற்று வட்டார பகுதியில் திமுக சார்பில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ் மாயவன் என குறிப்பிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொள்ளும் போட்டோவுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர், GST வரி உயர்வு போன்றவைகளுக்கு எப்போது சாட்டையால் அடித்துக் கொள்ளப் போகிறார்? என கேள்வியும் அதில் எழுப்பப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் மாயனூர், புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார் (SIR)?,ஹேஸ்டேக் குறியீடுடன் சேவ் அவர் டாட்டர்ஸ் (# Save Our Daughters) என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications