மூர்த்தி & கோவின் கவனிப்பு.. மதுரை மேற்கில் திமுக கொடி பறக்குது? எடப்பாடியிடம் சென்ற செல்லூர் ராஜு!
மதுரை: மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் மூர்த்தி & கோ செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியாமல் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தவித்து வருகிறார். இதனால் சட்டசபைத் தேர்தலில் மதுரை மேற்கு தொகுதிக்கு பதிலாக மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட செல்லூர் ராஜு முயன்றிருக்கிறார். ஆனால் அவருக்கு எடப்பாடி பழனிசாமி பிடி கொடுக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். குறிப்பாக திமுக பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்ற போது, அமைச்சர் மூர்த்திக்கு முக்கியமான அசைன்மெண்ட் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் கொடுத்தார். மதுரையின் 10 தொகுதிகளிலும் இம்முறை திமுக வெல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

குறிப்பாக மதுரை மேற்கு தொகுதியில் திமுக கொடி பறக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து அமைச்சர் மூர்த்தி மதுரை மேற்கு தொகுதியில் வேலைகளை தீவிரப்படுத்தினார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக மதுரை மேற்கு தொகுதி அதிமுகவின் வசமாக உள்ளது. அதனை மாற்ற அமைச்சர் மூர்த்தி மிகப்பெரிய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சில மாதங்களாகவே மதுரை மேற்கு தொகுதியில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு பரிசுப் பொருட்களை அள்ளிக் கொடுத்து வருகிறார் மூர்த்தி. தற்போது தீபாவளி நெருங்கிவிட்டதால், கட்சித் தொண்டர்களுக்கு வேட்டி, சட்டை, சேலை மட்டுமல்லாமல் கைச்செலவுக்கு பணமும் கொடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் திமுகவினரும் திக்குமுக்காடி இருக்கின்றனர்.
இதனை கவனித்து வரும் மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ செல்லூர் ராஜு, ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். ஆனாலும் மூர்த்தி & கோ நிர்வாகிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் மதுரை வந்த எடப்பாடி பழனிசாமியிடம், செல்லூர் ராஜு நேரடியாகவே இம்முறை மதுரை தெற்கு தொகுதியில் மாறி போட்டியிட முறையிட்டிருக்கிறார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில், சிட்டிங் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் யாரும் தொகுதி மாறி போட்டியிடக் கூடாது. அனைவரும் அவரவர் தொகுதியில் தான் போட்டியிட வேண்டும். யாருக்கும் மாற்றிக் கொடுக்க முடியாது என்று வெளிப்படையாகவே கூறி இருக்கிறார். இதனால் வேறு வழியின்றி செல்லூர் ராஜு மதுரை மேற்கு தொகுதியில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆனால் மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் மூர்த்தி பணிகளை சமாளிக்க முடியாமல் செல்லூர் ராஜு திணறி வருகிறார். ஒவ்வொரு மாதமும் பொதுக்கூட்டம், வாரம் ஒருமுறை கிடா விருந்து என்று திமுக நிர்வாகிகள் தொண்டர்களுக்கு சிறப்பு கவனிப்பை அளித்து வருகிறார். அதேபோல் தொகுதியில் உள்ள 30 சதவிகித வாக்காளர்களுக்கு வீடு தேடி பரிசுப் பொருட்களும் கொண்டு செல்லப்படுகின்றன.
இதனால் இவர்களை சமாளிப்பது எப்படி என்று செல்லூர் ராஜு சோகத்தில் உள்ளார். ஏனென்றால் ஒரு தொகுதியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போக மீதமுள்ள 30 சதவிகித வாக்காளர்களின் வாக்குகளை கைப்பற்றினாலே, அந்த தொகுதியில் வெற்றிபெற முடியும். இதன் காரணமாகவே வாக்காளர்களையும் இப்போதே மூர்த்தி மற்றும் அவரின் நிர்வாகிகள் கவனித்து வருவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications