காந்தியின் நினைவுகளை தாங்கி நிற்கும் மதுரை காந்தி மியூசியம் - மறக்காம போய் பார்த்துட்டு வாங்க
மதுரை வரும்போது உங்கள் குழந்தைகளை காந்தி அருங்காட்சியகத்திற்கு அழைத்து செல்லுங்கள். ஒரு தேசத்தின் விடுதலை வரலாறே நம் கண் முன்னே நின்று கொண்டிருக்கிறது.
மதுரை: மதுரை என்றால் மீனாட்சி அம்மன் கோவில் நினைவுக்கு வரும். சிலருக்கு மல்லிகைப்பூ போல இட்லியும், சிலருக்கு ஜிகர்தண்டாவும் நினைவுக்கு வரும். இங்கிருக்கும் உலகப்புகழ் பெற்ற காந்தி மியூசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்? மதுரையில் அமைதியாக இருக்கிறது காந்தி மியூசியம். ஒருமுறை இதற்குள் நுழைந்து பாருங்கள். சபர்மதி ஆசிரமத்துக்குள் நுழைந்த அனுபவம் ஏற்படும்.
ஒரு தமிழ் சினிமாவில் குற்றவாளிகளுக்கு தண்டனை தரும் நீதிபதி காந்தி மியூசியத்தில் போய் சேவை செய்ய வேண்டும் என்று கூறுவார். அதைக்கேட்டு மதுரை வந்து காந்தி மியூசியத்தின் அருமை தெரியாமல் ஆட்டம் போட்டுக்கொண்டிருப்பார்கள். அதே குற்றவாளிதான் பின்னர் காந்திய சிந்தனையை பின்பற்றுவார். மதுரையில் இருப்பவர்களுக்கும் மதுரையை சுற்றி இருக்கும் மக்கள் பலருக்கும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க காந்தி மியூசியத்தைப் பற்றி தெரிந்திருக்காது.
பல புகழ்பெற்ற தலைவர்கள் இங்கு வருகை தந்துள்ளார்கள். சர்வதேச அளவில் அமெரிக்காவின் கறுப்பின மக்களின் விடுதலை வீரர் மார்ட்டின் லூதர்கிங், திபெத்திய தலைவர் தலாய்லாமா ஆகியோர் இங்கு வந்துள்ளனர். பல வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வந்து ஆய்வு நடத்தி செல்கிறார்கள். இங்குள்ள நூலகத்தில் பல அரிய புத்தகங்கள் உள்ளன.
காந்தியடிகளை மேலாடையை கழற்ற வைத்து அரையாடைக்கு மாற்றிய மதுரை சம்பவம்
வரலாற்று சிறப்பு மிக்க காந்தி மியூசியம்
காந்தியடிகளின் மறைவிற்கு பிறகு இந்தியா முழுவதும் 7 காந்தி நினைவு அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டன. அதில் முக்கியமானது மதுரை காந்தி மியூசியம். அது ஏன் மதுரையில் இந்த மியூசியம் அமைத்தார்கள் என்ற கேள்வி வரலாம். அதற்கு மிகப்பெரிய வரலாறு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அரையாடை அணிந்த காந்தி
1921 ஆம் செப்டம்பர் மாதம் மதுரை வந்த காந்தியின் ஆடையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. மதுரை மேலமாசி வீதியில் தங்கியிருந்தபோது, அரையாடை உடன் வந்த மக்களைப் பார்த்த காந்தி தன் மேலாடையை களைந்தார். அரை ஆடைக்கு மாறினார். இந்திய மக்கள் அனைவரும் என்றைக்கு முழு ஆடை அணிகிறார்களோ, அன்றுதான் நானும் அணிவேன்' என்று சபதம் ஏற்றார். கடைசி வரை அப்படியே வாழ்ந்து காட்டினார். அப்படிப்பட்ட வரலாற்று சம்பவம் நிகழ்ந்த ஊர் என்பதால் மதுரையை தேர்வு செய்தார்கள்.
காந்தி அருங்காட்சியகம்
1670ஆம் ஆண்டு ராணிமங்கம்மாள் நிர்வாகம் செய்வதற்காக கட்டப்பட்ட அரண்மனை பின்பு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கலெக்டர், நீதிபதிகள் தங்கும் பங்களாவாக இருந்தது. அதையே காந்தி அருங்காட்சியகமாக 1959ல் அப்போதைய பிரதமர் நேரு திறந்து வைத்தார்.
இந்தியாவின் பழமையான காந்தி அருங்காட்சியகம் இது மட்டும்தான். இங்கு இந்திய விடுதலை வரலாறு, காந்தி வாழ்க்கை வரலாறு படங்களுடன் அமைந்துள்ளது.
காந்தியின் அஸ்தி
காந்தி பயன்படுத்திய பதினான்கு அசல் பொருட்களும், 32 மாதிரி பொருட்களும் இங்கு பாதுகாக்கப்படுகிறது. சுடப்பட்ட அன்று காந்தி உடுத்தியிருந்த ரத்த கரை படிந்த வேட்டி இங்கு உள்ளது. மகாத்மா காந்தியின் அஸ்தி பாதுகாக்கப்படுகிறது.
காந்திய தொண்டர்கள்
தமிழ்நாட்டில் காந்தி என்று தனி காட்சியகம் உள்ளது. சேவா கிராமத்தில் அவர் தங்கியிருந்த குடிசையின் மாதிரி இங்கு அமைக்கப்பட்டுள்ளது. மிக குறைந்த ஊதியத்தில் பத்துக்கும் மேற்பட்ட காந்திய தொண்டர்கள் இங்கு சேவை செய்து வருகிறார்கள்.
மறக்காம போய் பாருங்க
காந்தி அருங்காட்சியகத்தில் மிகவும் குறைந்த கட்டணத்தில் இங்கு காந்திய சிந்தனை, யோகா, ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் சுய தொழில் பயிற்சிகள் தினமும் கற்று தரப்படுகிறது. இதுவரை பார்க்காவிட்டாலும் இனி மதுரை வரும்போது உங்கள் குழந்தைகளை காந்தி அருங்காட்சியகத்திற்கு அழைத்து செல்லுங்கள். ஒரு தேசத்தின் விடுதலை வரலாறே நம் கண் முன்னே நின்று கொண்டிருக்கிறது.