விஜயகாந்த் மறைவால் வடிவேலு 1 நாள் முழுவதும் சாப்பிடல! அவர் அழுதது எனக்குத் தெரியும்! -மதுரை நண்பர்!
மதுரை: விஜயகாந்த் இறந்துவிட்டார் என்ற தகவலை அறிந்து வடிவேலு ஒரு நாள் முழுவதும் சாப்பிடவில்லை என அவரது நெருங்கிய மதுரை நண்பரும், விசிக நிர்வாகியுமான மாலின் தெரிவித்திருக்கிறார்.
விஜயகாந்த் மறைவால் வடிவேலு அழுதது தனக்குத் தான் தெரியும் என்றும் நேரில் சென்றால் அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பதாலேயே அவர் செல்லவில்லையே தவிர மற்றபடி எந்தக் காரணமும் இல்லை என விட்டுக்கொடுக்காமல் பேசியிருக்கிறார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடிவேலு வரவில்லை வடிவேலு வரவில்லை என சிலர் திட்டமிட்டு கார்னர் செய்து வருவதாகவும் விஜயகாந்த் செய்த உதவிகளை கூறி வடிவேலு எந்தளவுக்கு துயரப்பட்டார் என்பது அவரை நெருங்கி பழகியவர்களுக்கு தான் தெரியும் எனவும் மாலின் கூறியிருக்கிறார். வடிவேலு மகன் திருமணம், வடிவேலு தாயார் மரணம், வடிவேலு தம்பி மரணம், என எந்த நிகழ்வுக்காவது நடிகர் சங்கத்தில் இருந்து யாராவது ஒருவர் வந்தார்களா என கேள்வி எழுப்பியுள்ள மாலின், கடந்த 10 ஆண்டுகளாக எந்த நடிகரும் அவரை என்னவென்று கூட கேட்கவில்லை என்றும் இதனாலேயே அவர் மனம் வெறுத்துப் போய்விட்டார் எனவும் கூறினார்.
எல்லோரும் நினைப்பது போல் வடிவேலு ஒன்றும் மகிழ்ச்சியாக இல்லை என்றும் அவரது சொத்துக்கள் அனைத்தும் இடியாப்பச் சிக்கலில் இருந்து வருவதாகவும் சொத்து வாங்கிக் கொடுத்தவர்கள் அனைவரும் ஏமாற்றுவார்கள் என்பதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வடிவேலு, மிகுந்த மனப்பாரத்துடன் தான் இருந்து வருவதாகவும் அவரது நண்பர் மாலின் விளக்கம் அளித்திருக்கிறார்.
விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு வரவில்லை என பேசுகிறவர்கள், விஜயகாந்தால் சட்டமன்ற உறுப்பினராகிவிட்டு அவருக்கு துரோகம் செய்து ஓடிய முன்னாள் எம்.எல்.ஏ.க்களை பற்றி ஏன் பேசவில்லை எனவும் மாலின் வினவினார். விஜயகாந்த் செய்த உதவிகளையும், அவருடன் பழகிய பழைய நாட்களையும் தங்களிடம் வடிவேலு பகிர்ந்துகொண்டதாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications