ஆட்சியில் பங்கு! மாணிக்கம் தாகூர் தலைமையிலான காங். செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
மதுரை: ஆட்சியில் பங்கு என்கிற கோரிக்கையை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஆட்சியில் பங்கு என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிராகரித்திருந்தார். இருப்பினும், தொடர்ந்து காங்கிரஸ் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. தற்போது, ஆட்சியில் பங்கு கோரி காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த தீர்மானத்தில், "ஆட்சியில் பங்கு தர வேண்டும். அதிக எண்ணிக்கையிலான கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். உள்ளாட்சியில் 30 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் பேசியதாவது, "நாங்கள் கேட்பதெல்லாம் மரியாதையும் அன்பையும்தான். திமுக அமைச்சர்கள் பேசுவது வலியை கொடுக்கிறது. ராகுல் காந்தி தமிழக முதலமைச்சரை சகோதரர் என்று அழைக்கிறார். அதேபோல எங்களுக்கும் மரியாதை வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் அமைச்சர்கள் காங்கிரஸை வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும் என்று கூறுகிறார்கள். கூட்டணி குறித்து அசால்ட்டாக பேசுகிறார்கள். இதெல்லாம் வலியை கொடுக்கிறது.
நாங்கள் உங்களோடு இருந்து நீங்கள் செய்த தவறுகளுக்காக பழைய சுமந்தவர்கள். எங்களை பொறுத்தமட்டில் நாங்கள் கேட்பதெல்லாம் மரியாதை மட்டும்தான். திமுக மாவட்ட செயலாளர் தளபதி பேச்சு வருத்தமளிக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 20 நாட்கள் ஆகிவிட்டது. தற்பொழுதும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மற்ற மாவட்ட செயலாளர்களும் பேசுகிறார்கள். இதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பவன் நான் கிடையாது. எங்களை தாக்கினால் நாங்கள் திருப்பி தாக்குவோம்.
பூத் கமிட்டியில் ஆள் இல்லை என்று விமர்சிக்கிறார்கள். நாங்கள் இதற்கான பட்டியலை ரெடி செய்திருக்கிறோம். பூத் கமிட்டி ஆட்களுக்கான கூட்டத்தை போட்டு நாங்கள் பலத்தை நிரூபிப்போம்" என்று பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications