புலி பாயுமாம்.. எதிர்கால திட்டம் நாளை மதுரையில் அறிவிப்பாம்- வைகோ பேச்சு- மதிமுகவில் பரபரப்பு!
மதுரை: தமது எதிர்கால திட்டம் தொடர்பான அறிவிப்பை ஒன்றை மதுரையில் நாளை நடைபெறும் மாநாட்டில் தாம் அறிவிக்க இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ தெரிவித்திருப்பது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவில் வாரிசு அரசியல் திணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி கலகக் குரல் எழுப்பியவர் வைகோ. இதனாலேயே திமுகவில் இருந்து நீக்கப்பட்டு மதிமுக என தனிக்கட்சி தொடங்கினார். காலச் சக்கரத்தில் வைகோ தனிக்கட்சியை தொடர்ந்து நடத்தினாலும் எந்த திமுகவை எதிர்த்தாரோ அதே திமுகவுடன் கூட்டணி வைத்தார்; முதல்வர் ஸ்டாலினை வாரிசு அரசியல் என விமர்சித்த வைகோ அவர் மூலமே ராஜ்யசபா எம்பி பதவி பெற்று மீண்டும் டெல்லி அரசியலில் கால் பதித்திருக்கிறார்.

அத்துடன் இல்லாமல், தமது அரசியல் வாரிசாக மகன் துரை வையாபுரி என்ற துரைவைகோவை கட்சிக்குள் கொண்டு வந்தார். தற்போது மதிமுகவின் முதன்மை செயலாளர் பதவி வகித்து வருகிறார் துரை வைகோ. வாரிசு அரசியலை எதிர்த்த வைகோ வாரிசு அரசியலை கட்சிக்குள் நடைமுறைப்படுத்தியதால் மதிமுகவில் இருந்த மூத்த தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து ஒதுங்கிக் கொண்டனர். பலர் கட்சியைவிட்டே வெளியேறிவிட்டனர்.

இந்நிலையில் மதுரையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநாடு நடத்துகிறது மதிமுக. இந்த மாநாட்டு ஏற்பாடுகளை வைகோ நேற்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த வைகோ, நாட்டில் கொலை, கொள்ளை, பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. பிரதமர் மோடி இன்னொரு ஹிட்லராக, முசோலினியாக மாறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. அனைத்து தரப்பினரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. "இந்தியா" கூட்டணி தலைவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தரும் மரியாதையைப் பார்த்து மகிழ்ந்து போனேன். மத்தியில் நடக்கும் சர்வாதிகார சர்க்காரை வீழ்த்தி "இந்தியா" கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்.
நான் விமானத்தில் வரும்போது, சிங்கத்தின் கர்ஜனையை கொஞ்ச நாளாக காண முடியவில்லை என கூறினார். புலி பாய வேண்டிய நேரத்தில் பாயும். மதுரை மாநாட்டில் நாளை என் எதிர்கால திட்டத்தை அறிவிப்பேன். இவ்வாறு வைகோ கூறினார். வைகோ அறிவிக்கும் எதிர்கால திட்டம் எது என்பது தொடர்பாக மதிமுகவில் பல்வேறு கருத்துகளுடன் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications