அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. எல்லோரும் சமம்தான்.. தகுதியானவருக்குத்தான் பரிசு.. அமைச்சர் உறுதி
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நாங்கள் யாரையும் ஏற்ற இறக்கமாக பார்க்கவில்லை என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். அனைத்து வீரர்களும் எங்களுக்கு சமம், தகுதியானவர்களுக்கே பரிசுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை 10 சுற்றுக்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் 810 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் களம் கண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

மாலை 6.30 மணி வரைக்கும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை அடக்கிய மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் என்ற மாடுபிடி வீரருக்கு 7லட்சம் மதிப்பிலான ஒரு நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது.
இதையடுத்து 2வது இடம்பிடித்த மாடுபிடி வீரரான 17 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியை சேர்ந்த அபிசித்தர் என்ற வீரருக்கு பைக் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முதல் பரிசு அறிவிப்பில் சதி நடந்துவிட்டதாக கூறி பரிசை வாங்க மறுத்து புறக்கணித்தார் அபிசித்தர். இவர் கடந்த ஆண்டு முதலிடம் பிடித்து கார் பரிசாக வென்றவர்.
செய்தியாளர்களிடம் பேசிய அபிசித்தர், இன்றைய தினம் ஜல்லிக்கட்டை மாலை 6.30 மணி வரை நீட்டித்தது தவறு. ஜல்லிக்கட்டில் நான்தான் முதலிடம் பெற்றேன். எனக்கு கார் பரிசு தேவையில்லை. முதலிடம் பெற்றதாக அறிவித்தாலே போதும். அமைச்சர் மீது புகார் அளிக்க உள்ளேன் என்று கூறினார் அபிசித்தர்.
அபிசித்தர் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களிடம் பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, இரண்டாம் இடம் பிடித்த அபிசித்தர் குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்று கூறினார். விழாக்குழு முடிவின்படியே பரிசுகளை வழங்கியுள்ளோம். நாங்கள் யாரையும் ஏற்ற இறக்கமாக பார்க்கவில்லை. அனைத்து வீரர்களும் எங்களுக்கு சமம், தகுதியானவர்களுக்கே பரிசுகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.












Click it and Unblock the Notifications