"மெத்த படித்தவருக்கு சமூக திட்டங்கள் பற்றி தெரியவில்லை" பிடிஆர் மீது பாய்ந்த ஆர்பி உதயகுமார்!
மதுரை: மக்களின் சமூக பாதுகாப்புத் திட்டங்களை நிறுத்திவிட்டு வருவாய் பற்றாக்குறை இரு மடங்காக குறைத்ததாக கூறுவதா என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்து ஒரே ஆண்டில் பெண்களுக்கு இலவச பேருந்து உள்ளிட்ட திட்டங்களுக்கு செலவழித்தும் வருவாய், நிதி பற்றாக்குறையை பொருளாதாரம், வளர்ச்சியையும் பாதிக்காமல் குறைத்துள்ளதாகவும், அதேநேரம் பண வீக்கமும் குறைந்துள்ளதகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்துக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதாரம் படித்தவருக்கு மக்கள் வாழ்க்கை பற்றி தெரியுமா, ஒரு மனிதனுக்கு தேவை உணவு, உடை, இருப்பிடமாகும்.
அதே இடம்.. '5 மணி நேரம்'.. ஓபிஎஸ்க்கு போட்டியாக யாகம் நடத்திய ஆர்பி உதயகுமார்..? என்ன திட்டம்!
பட்டியல் வெளியிடுங்கள்
கடந்த 15 மாதகாலத்தில் நிதி அமைச்சர் எத்தனை புதிய திட்டங்கள், மக்களுக்கு வாழ்வாதார திட்டங்கள், மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்கள், கல்வி திட்டங்கள், வேலை வாய்ப்பு திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம் என்பதை பட்டியலிட்டு சொன்னால் சாலப்பொருத்தமாக இருக்கும்.
அதிமுகவின் திட்டங்கள்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி 8 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் தோறும் அரிசி திட்டத்தை தந்தார்கள். அத்திட்டத்தினை எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கடைசி வரை கொண்டு சென்றார். தாலிக்கு தங்கம் திட்டத்தை அதிமுக ஆட்சி காலத்தில் கடைசி வரை வழங்கப்பட்டது. 37 லட்சம் முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு உதவித்தொகை 1000 ரூபாய் வழங்கப்பட்டது.
கடந்த திமுக ஆட்சியில் ரூ.1200 கோடி ஒதுக்கப்பட்டது, ஆனால் அதிமுக ஆட்சியில் ரூ.3000 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இன்றைக்கு மக்கள் மனு கொடுக்கிறார்கள் அந்த மனுக்களுக்கு என்ன தீர்வு ஏற்பட்டுள்ளது, எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த திட்டங்களை தான், இன்றைக்கு முதலமைச்சர் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
சர்வாதிகாரப் போக்குடன் பதில்
அதேபோல், வருவாய் பற்றாக்குறை குறித்து அமைச்சர் விளக்கம் கொடுத்திருப்பது தெளிவாக தெரிகிறது சர்வாதிகார போக்கு என்று. சொத்து வரி, மின்சார வரி, சாக்கடை வரியை உயர்த்தி விட்டு சர்வாதிகார போக்குடன் பதில் கூறுவதா? மெத்தப் படித்தவருக்கு மக்களின் சமூக திட்டங்கள் குறித்து தெரியவில்லை. இன்றைக்கு ஒருபுறம் அனைத்து வசதிகளில் உள்ள உயர்ந்த மக்கள் உள்ளனர். மறுபுறம் அடிப்படை வசதி இல்லாமல் ஏழை எளிய மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களை கரைசேர்க்க கடமையாற்ற நிதி கையாளப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக வாக்குறுதிகள் என்ன ஆனது?
தொடர்ந்து, தமிழக நிதிநிலை வீட்டுக்கு கணக்கு அல்ல. செலவுகளை குறைக்க மக்களின் அடிப்படை தேவைகளை செய்து தருவது தார்மீக கடமை. கடந்த தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் 525 வாக்குறுதிகளை அளித்தார். அதில் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், கேஸ் மானியம் 100 ரூபாய், பெட்ரோல் டீசல் விலை குறைப்போம் என்று கூறினார். ஆனால் இதுவரை எதுவும் செய்யவில்லை என்று விமர்சித்துள்ளார்.
வருவாய் பற்றாக்குறை
தொடர்ந்து, மனிதன் சுவாசிக்கும் மூச்சுக்காற்றை நிறுத்திவிட்டு காற்றை மிச்சபடுத்திவிட்டேன் என்று கூறுவது போல் மக்களின் சமூக பாதுகாப்புத் திட்டங்களை நிறுத்திவிட்டு வருவாய் பற்றாக்குறை இரு மடங்காக குறைத்ததாக தமிழக நிதி அமைச்சர் கூறுவதா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.