”நான் ஏன் அப்படி சொன்னேன்னு புரிஞ்சதா” - விளம்பரப் பிரியர்களை வட்டம் போட்டு காட்டிய பிடிஆர்!
மதுரை: மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணனுக்கு மரியாதை செலுத்தியது தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது மதுரை விமான நிலையம் வந்த லட்சுமணின் உடலுக்கு, தமிழக அரசு சார்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு.. பாஜகவைச் சேர்ந்த 5 பேர் கைது!
செருப்பு வீசிய பாஜக
அப்போது ராணுவ வீரரின் உடலுக்கு தமிழக அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திய பின்னர், பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் பிரச்சினை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து காரில் பழனிவேல் தியாகராஜன் புறப்பட்டபோது, பாஜகவைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் செருப்பை வீசினார்.
இதுவரை 7 பேர் கைது
இதுதொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாஜக மதுரை மாவட்ட தலைவர் சரவணன் நேற்று இரவு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டிற்கு நேரில் சென்று மன்னிப்பு கோரினார். பின்னர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிடிஆர் ட்வீட்
இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, பிண அரசியல் செய்பவர்களை பற்றி பேச விரும்பவில்லை. பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் யார் என்பது தெரியும். பிணத்தை வைத்து அரசியல் செய்யும் நபர்கள் குறித்து நாளை பேசுகிறேன் என்று தெரிவித்தார். இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், மறைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்தியவர்களின் புகைப்படங்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.
குற்றச்சாட்டு
அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களில், மறைந்த ராணுவ வீரர் லட்சுமணனுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் எவ்வித சலசலப்பும் இன்றி அமைதியாக மரியாதை செலுத்துகின்றனர். இறுதியாக பதிவிட்டுள்ள புகைப்படத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் பாதுகாப்பு வளையத்தையும் மீறி கேமராக்களோடு மரியாதை செலுத்தியுள்ளனர். இதனை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வட்டம் போட்டு காட்டியுள்ளார்.
விளம்பர அரசியல்
அந்த புகைப்படங்களோடு, ஏன் மரபுகளை கடைபிடித்து, விளம்பரம் தேடும் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று நான் ஏன் சொன்னேன் என்பது அனைவருக்கும் இப்போது புரிந்திருக்கும். இதன் காரணமாக தான் அத்தகைய நபர்களுடன் விவாதத்தில் ஈடுபட மறுக்கிறேன் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.